26 சிவ மூர்த்தங்களின் தரிசனப் பலன்

 1. லிங்கோத்பவர் - மோட்சம் சித்திக்கும்.

2. திரிமூர்த்தி - குழந்தைப்பேறு கிட்டும்.

3. கல்யாண சுந்தரர் - திருமணப் பேறு கிடைக்கும்.

4. சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்.

5. கங்காதரர் - பாவங்கள் விலகும்.

6. நடேசர் - மகப்பேறு கிட்டும்.

7. சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்.

8. ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

9. நீலகண்டர் - விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்.

10. ஹரிஹர மூர்த்தி - வழக்குகளில் வெல்லலாம்.

11. ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே  ஒற்றுமை நிலவும்.

12. உமாசகாயர் - மனைவியின் உடல்நலம் சீராகும்.

13. அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்.

14. தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்.

15. சோமாதி நாயகர் - சகலமும் சித்தியாகும்.

16. சோமாஸ்கந்தர் - குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்.

17. சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்.

18. வீரபத்ரர் - எதிரி பயம் நீங்கும்.

19. காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது.

20. காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்.

21. கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்.

22. திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

23. பிட்சாடனர் - மோகமாயை விலகும்.

24. ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்.

25. சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்.

26. பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.

எண்ணம் போல் வாழ்க்கை

 ஒரு வீட்டு வாசலில் யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.

"அம்மா... தாயே... ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா !"


அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வந்து பார்த்தாள். அங்கே வீதியில் விளையாடிக்

கொண்டிருந்த, தனது ஐந்து வயது மகளை அழைத்து, அவளது கைகளால் அரிசியை,

அள்ளிக் கொடுத்து, யாசகனின் பாத்திரத்தில் இடச் சொன்னாள்.


பெற்று கொண்ட யாசகனும், பக்கத்து வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டான். அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு, அவளது கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.


காலங்கள் உருண்டோடின..


இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது. இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்களாகினர். அவரவர்கள் தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன..


ஒரு நாள், அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.


அங்கே, அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது. மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.


உடனே, அவள், இறைவனிடம் பதறிக் கதறி முறையிட்டாள். "இருவருமே ஒரே மாதிரி தானே தானம் செய்தோம். எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம்??

ஏற்ற இறக்கம்??" என்று வாதிட்டாள்.


அதற்கு இறைவனோ...

"முதலாமவளோ, தனக்கு பிறகு, தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்யச் சொன்னாள்.

ஆனால் நீயோ... உன் கைகளால் எடுத்தால், அரிசி நிறைய செலவாகும் என்ற எண்ணத்திலே, உன் குழந்தையின் கையால் எடுத்து தானமிடச் செய்தாய்.


இருவரது 'செயலும்' ஒன்றே..

எனினும் 'எண்ணங்கள்' வெவ்வேறு!" என்றார்.


எனவே, எந்த செயலைச் செய்தாலும், மேலான எண்ணங்களோடு செய்யும் செய்தால் தான் நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் ஆத்ம திருப்தி தரும். மனநிறைவான உணர்வுக்கும் வழி காட்டும். சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை விட, பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை; மேலானவை. அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்து நிற்கும்.


ஸ்ரீதேவி மாஹாத்மியம் - ஓர் அறிமுகம்

"கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள்.


துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது. 


சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.


சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து  அறியலாம்.


சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும் பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.


டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.


யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின்  பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.


"யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா " என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. 

அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.


இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி உபதேசித்ததாக கூறுவர்.


தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர்.


இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும்  தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார். 


ஒரு சமயம் இப்படி விஷ்ணு மாயையினால் பீடிக்கப்பட்ட மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்து விட அவருடைய காதின் அழுக்கிலிருந்து மது, கைடபன் என இரு அசுரர்கள் தோன்றினர். பின்னர் க்லிம் என்ற ஸப்தத்தை கடலில் ஆடும் போது கேட்டு அது தேவி பீஜம் என்பதை அறியாமலேயே அதன் வசப்பட்டு அதை விடாது ஜபித்து தேவியின் தரிசனம் கண்டு தாங்கள் விரும்பும் போதே தங்கள் மரணம் நிகழ வேண்டுமென்ற வரத்தை பெற்றனர். 


பலம் கொண்ட அந்த அசுரர்கள் பிரம்மாவை துன்புறுத்த அவர் அம்பிகையை பிரார்த்தித்து விஷ்ணுவை யோக நித்திரையிலிருந்து எழுப்புகிறார். பின்பு விஷ்ணு அவ்விரு அரக்கர்களோடு ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டும் வெல்ல முடியாமல் அம்பிகையை சரணடைய , தேவீ மோகினியாக தோன்றி அவ்வசுரர்களை தன் வசம் மயக்கி விஷ்ணுவிற்கு வரமளிக்க தூண்டுகிறாள். மஹாவிஷ்ணு நீங்களிருவரும் என்னாலே மரணமடைய வேண்டும் என வரம் பெற்று அவர்களை ஸம்ஹரிக்கிறார்.  இதனால் தேவி மதுகைடபஹந்தரி என்று விஷேச நாமம் பெற்ற சரிதத்திலிருந்து ஒவ்வொன்றாக கூறத் தொடங்குகிறார்.


இப்படி 13 அத்தியாயங்களில்  மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.


அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம். 


இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.


முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும்.நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது. 


இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.

ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத் ||

- ஜிதேஷ் ஸுப்ரஹ்மண்யம்

ஸ்ரீ புவனேஸ்வரி பீடம்.

ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ

தேவீ மஹாத்ம்யம் - ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் உள்ள மகத்தான, சக்திமிக்க அதிர்வுகளைக் கொண்ட ஸ்லோகங்கள். சக்தியின் மஹிமைகளை 700 ஸ்லோகங்களில் (மந்திரங்களில்) துதித்துள்ளனர். மகிமை மிக்க இந்த ஸ்துதியை சொல்வதால், அம்பிகை அகம் மகிழ்ந்து அன்பர்களுக்கு அருள்கிறாள் என்கிறது புராணம்.

மூன்று சரிதங்கள் கொண்ட இதன் ஸ்லோகங்கள்,
ப்ரதம சரிதம் - மதுகைடபன் என்ற அரக்கனை வதம் செய்ததையும்,
மத்யம சரிதம் - மகிஷாசுர வதம் மற்றும் உத்தம சரிதம் - சும்ப-நிசும்ப வதம் பற்றி விவரிக்கின்றன.

மனனம் செய்வோரைக் காப்பதே மந்திரம் எனப்படும். இந்த "தேவி மஹாத்மியம்" - இதிலுள்ள அனைத்து ஸ்லோகங்களுமே மந்திரம் என்றே ஆன்றோர் கூறுவார்கள். இந்த மந்திரங்களில் பகையை வெல்லுதல், பிணி நீக்கம், கல்விப் பேறு, மகப் பேறு, ஞானப் பேறு, தன வ்ருத்தி, லோக க்ஷேமம் என்ற 700 வகையான பிரயோகங்கள் பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதனை பாராயணம் செய்வது ஆகச் சிறப்பு மிக்கது.

தினமும் ஸப்த ஸதி பாராயணம் எல்லோராலும் சொல்லமுடியாது. அதனால் தான், பெரியோர்கள், ஸப்த ஸதியின் சாரமான 'துர்க்கா ஸப்த ஸ்லோகி' என்று ஏழு ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அவற்றைச் சொன்னாலே அனைத்துப் பலனும் கிட்டும், எனச் சொல்லி வைத்துள்ளனர் ஆன்றோர்.

அதேபோன்று அவரவர் கோரிக்கைகள் நிறைவேற சொல்லவேண்டிய ப்ரத்யேக ஸ்துதிகளும் உண்டு.

' துர்க்கா ஸப்த ஸ்லோகீ ' - ஏழு ஸ்லோகங்களையும் , எட்டாவதாக அவரவர் வேண்டுகோளுக்குரிய ஸ்துதியும், தினமும் சொன்னாலே போதும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பம் நிறையவும் நிலைக்கச் செய்வாள் அன்னை துர்க்கை.

மனம் ஒன்றி, நிதானமாக, அனுபவித்து, வாய்விட்டு சொன்னால் சிறந்த பலன்களை தரும்.

ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயண ருஷி: || அனுஷ்டுப்சந்த:
ஸ்ரீ மஹாகாளி, மஹாலக்ஷ்மீ, மஹா சரஸ்வத்யோ தேவதா: |
ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே ஜபே (பாடே) விநியோக: ||

க்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥

மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள்.

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே'ஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு'பாம் ததாஸி ।
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥

கடக்க முடியாத பெரும் துன்பத்தில் ஸ்மரிக்கப்பட்டால் ஸ்ரீ துர்க்கா தேவி,சகல பிராணிகளின் அச்சத்தையும் போக்குகிறாள் (அல்லது) துர்கே உனை ஸ்மரித்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய். இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே ! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக ஸதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு?

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
ச'ரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

மங்கள வஸ்துக்கள் அனைத்தினும் பரம மங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத் தருபவளே! சரணாகத நிலையமே! முக்கண் படைத்த (அல்லது மூம்மூர்த்தியருக்கும் அன்னையான) த்ரயம்பகியே ! வெண்பொற் சோதியாம் கௌரி! நரருக்கெல்லாம் ஆசிரயமாம் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

ச'ரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

'சரண்' என வந்த தீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

ஸர்வஸ்வரூபே ஸர்வேசே' ஸர்வச'க்தி ஸமந்விதே ।
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

காணும் உருவனைத்தும் நீயே! அனைத்தையும் ஆளும் தேவி நீயே! சர்வ‌ சக்தியும் ஒன்றிய இடம் நீயே! தேவி துர்கே! உனக்கு வந்தனம்! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்!

ரோகா நசே'ஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலான-பீஷ்டான் ।
த்வாமாச்'ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்'ரிதா ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥

(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு அரணாகின்றனர் அன்றோ?

ஸர்வா பாதா ப்ரச'மனம் த்ரைலோக்ய-ஸ்யாகிலேச்'வரி ।
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாச'னம் ॥ 7 ॥

அகிலாண்டேசுவரி! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.

மனமது செம்மையானால்...

 ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. 


அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.


கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.


"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன. 


தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை, எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு, மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. 


"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". 


குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.


நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.


அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். 


குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.


சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 


அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.


குரங்கோ, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது. 


அவர் மீண்டும் சொன்னார், " பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு". அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. 


அட நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா…


குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.


நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.


கவலைகளை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்…


ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்.

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.


ஆரஞ்சு பழமும் நாத்திகனும்

அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும்" என்று, அவன் கட்சிக்காரர்கள், அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை,
வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள்...." என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாக பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக, "கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்துவிட்டு...

"யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்!"
என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த, பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான். தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே!!" எனக் கோபங் கொண்டான் நாத்திகன்.

பழத்தை உரித்தவன் சுளை சுளையாகத் தின்று கொண்டே, "பொறு.. பொறு.. தின்று முடித்து விட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" எனச் சொல்லியவாறு ரசித்துத் தின்று கொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே! நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்?"
என்றான் நாத்திகன் ஆங்காரத்துடன்!

"கடவுள் யார்? அவர் எப்படிபட்டவர்? அவரின் ஆற்றல் என்ன? என்பதை, நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுப் பார்த்தால் தானே உனக்குத் தெரியும்!! இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சுப் பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது, பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி, வழிபட்டு, நமக்கு வழிகாட்டி,  பாரம்பரியமாக கொண்டாடிவரும் கடவுளை, இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்? அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்?" என்றான் அந்த மெகாக்குடிகாரன்!!

கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

தர்மம் தலை காக்கும்

இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்.

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.

இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள். அவன் முனகியது, இதுதான்:
"நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.

'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவா தோணல!!
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஒனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணிப் புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா? இல்ல, சித்தனா? பரதேசி பய!!' என்று திட்டினாள்.

'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள். நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது.

ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு, அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனல் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு, வழக்கம்போல, "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!

அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள். வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு, ஒரு மாதம் முன்பு, வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!

"அம்மா, வீட்டுக்குத் திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல. தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல. மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன். நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு; மயங்கி விழுந்துட்டேன். கண் முழிச்சு பாத்தப்போ... யாரோ ஒரு கூனமுதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு, ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான். இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!"

இதைக் கேட்டதும், பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள். 'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன.

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்"...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது. உன்மைதான்!!

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை. புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை.

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும். ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா:

ஸுமங்கலி ப்ரார்த்தனை

Sri Ranga Naayaki

(Courtesy: காஸ்யபதி சாஸ்திரிகள்)

ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பச்யத |
ஸௌபாக்யமஸ்யை தத்வா யா தாஸ்தம் விபரேதன ||

என்கிற வேத மந்த்ர ஆசீர்வாதத்தில், க்ருஹ்ணீயான கல்யாணமான பெண்ணிற்கு ஸுமங்கலி எனும் அந்தஸ்தையும் அனைத்து ஸௌபாக்யங்களை (மங்கலங்களை)யும் கொடுக்குமாறு தேவர்களைப் ப்ரார்த்திக்கிறது.

நம் ஸனாதன வைதிக தர்மத்தின் ஆதாரமான வேதங்களும், சாஸ்த்ரங்களும் ஆண்களுக்குப் பல்வேறு கர்மாக்களையும்,  பெண்களுக்குப் பற்பல வ்ரதங்களையும் அனுஷ்டிக்கும்படி அறிவுறுத்துகின்றன.

அநேக விதமான, க்ரஹ்ய ஸூத்ரங்களும், ப்ரயோக க்ரந்தங்களும் வ்ரத சூடாமணி, வ்ரத கல்ப மஞ்ஜரீ, வ்ரத பூஜா விதானம் முதலிய நூல்களும் கர்மாக்களின், வ்ரதங்களின் செய்யும் முறைகளை விரிவாக விளக்குகின்றன.

இவை தவிர நாம் பல பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம்.

“ஸுமங்கலி ப்ரார்த்தனை” வைதிக கர்மா இல்லை; வ்ரதமும் இல்லை; பண்டிகையும் இல்லை.

பின் எவ்வாறு அழைக்கலாம்? நீங்களே ஒரு பெயர் சூட்டலாமே! பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பெண்களின் ஸமாராதனை (ஒரு விசேஷமான விசேஷம்).

வருடம் தோறும் நடத்த வேண்டுமென்பதில்லை. நம் வீடுகளில் கல்யாணம் போன்ற ஸுப கார்யங்கள் நடக்கும்போது, அந்தந்த விசேஷங்களை ஒட்டி, முன்னரோ பின்னரோ இந்த ஸுமங்கலி ப்ரார்த்தனையைச் செய்ய வேண்டும். வீட்டில் பெரியவர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்படி ஸ்ரத்தையுடனும் ஆசாரத்துடனும் நல்ல முறையில் செய்ய வேண்டும்.

தேசத்துக்குத் தேசம், மாவட்டத்திற்கு மாவட்டம், ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு, குலத்துக்குக் குலம் ஸம்ப்ரதாயங்கள்,  நடைமுறைகள் மாறுபடும்.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனையை நல்ல நாள் பார்த்துச் செய்ய வேண்டும். வெள்ளி கிழமையில் செய்வது விசேஷம். திங்கள் அல்லது புதன் கிழமைகளிலும் செய்யலாம்.

கரிநாள், கிரஹணம், அமாவாசை மற்றும் தர்ப்பண தினங்களில் கூடாது. க்ருஹ வாத்யாரிடம் கேட்டு நாள் குறிக்கவும்.

ஒரு வருஷத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு முறைதான் செய்ய வேண்டும். விவாஹத்திற்கு முன் செய்ய நாள் வாய்க்காவிடில் திருமணத்திற்குப் பின் நாட்டுப் பெண் வந்ததும் நாள் பார்த்துச் செய்யலாம். அதே போல் பெண் வீட்டில் புக்ககத்திலிருந்து பெண்ணை அழைத்து வந்தும் செய்யலாம்.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனை செய்ய நாள் பார்த்துத் தீர்மானித்தவுடன்,

அதற்கு ஓரிரு நாள் முன்பே 9 கஜம் புடவையும், ரவிக்கைத் துணியும், சித்தாடையும் (3 கஜம்) புதிதாக வாங்க வேண்டும். புடவை கறுப்பு, கருநீலம், கரும்பச்சை நிறங்களில் இருக்கக் கூடாது. நூல் புடவை சாலச் சிறந்தது. சித்தாடையும் கருநிறமின்றி சீட்டித் துணியில் எடுக்கலாம்.

நீண்ட நாட்கள் முன்பு வேறு ஏதாவது விசேஷத்திற்கு வாங்கிய புடவையோ, யாராவது வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்த புடவையோ கூடாது.

ஸுமங்கலி ப்ரார்த்தனையில்  போஜனத்திற்கு உட்காரும் ஸுமங்கலி பெண்கள்/மாமிகள் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய ரவிக்கைத் துணிகளையும் கறுப்பு நூல் கலக்காததாக வாங்க வேண்டும்.

மேலும் வெற்றிலைப் பாக்குடன் கொடுப்பதற்கு பழம், தேங்காய், குங்குமம், மஞ்சள், சீப்பு, கண்ணாடி, மல்லிச்சரம் போன்றவற்றையும் வாங்கித் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனையில்  போஜனம் செய்ய முறைப்படி அழைக்கப்படும் ஸுமங்கலிப் பெண்கள் (”பெண்டுகள்” எனப்படுவர்) 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். கன்யாப் பெண் இருவரையும் சேர்த்து எண்ணி ஒற்றைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும். கன்யாப் பெண் என்பவள் 3 வயதுக்கு மேற்பட்ட ருதுவாகாத இலையில் தானாகவே சாப்பிடக்கூடிய பக்குவம் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும்.

ருதுவான பெண் கன்யாப் பெண் இல்லாவிடினும் நம் வீட்டுப் பெண்ணிற்குத் திருமணம் என்றால் அந்தப் பெண்ணைக் கன்யாப் பெண்ணாக பாவிக்கலாம். நாட்டுப் பெண்கள், ஓரகத்திகள் பெண்டுகளாக உட்காருவதில்லை. மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெண்டுகளாக இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தால் இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களை ஒரு வருடத்திற்கு பெண்டுகளாகவிருக்கும் வழக்கமில்லை.

குடும்ப வழக்கப்படி, முதல் நாள் மாலை ஸுமங்கலிப் பெண்டுகளை அவர்கள் வீட்டிற்குச் சென்று குங்குமம், எண்ணெய், சீயக்காய், மஞ்சள் கொடுத்து விட்டு மறுநாள் போஜனத்துக்கு வரச் சொல்லி அழைக்கவும். சில இடங்களில் விசேஷ தினத்தன்று காலை எண்ணெய் நைவேத்யம் செய்து பின் மங்கலப் பொருள்களைக் கொடுத்து அழைக்கும் பழக்கமும் உள்ளது. அன்று நேரம் உள்ளவர்கள் அவ்வாறு செய்யலாம்.

ஸுமங்கலி ப்ரார்த்தனை நடக்கும் நாள் காலை வீட்டை மெழுகி வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும்.

புதிய புடவையை மட்டும் நனைத்து கிழக்கு மேற்காக உலர்த்திக் காய்ந்த பின் கொசுவமாகச் சுற்றி ரவிக்கைத் துணியுடன் கோலமிட்ட பலகையில் வைத்து அதன்மீது முகம் பார்க்கும் கண்ணாடி, புஷ்பம், மங்கலப் பொருள்கள் ஆகியவற்றை வைக்கவும்.

சில வீடுகளில் பூவாடாப் பானை (பூவாடாப் பானை, பூவோடுபானை)யில்  புடவை வைக்கும் வழக்கம் உண்டு. இது ஒரு மூடியுடன் கூடிய வெங்கலப் பானை, புடவைக் கலம் கிழக்கு நோக்கி அமரும்படி இருக்க வேண்டும். மற்ற பெண்டுகளின் இலைகள் வடக்கு அல்லது மேற்குப் பார்த்து அமரும்படி இருக்க வேண்டும்.

ஒரே அறையில தான் எல்லா இலைகளும் இருக்க வேண்டும். இலைகளின் நுனி உட்காருபவரின் இடது கைப்பக்கம் இருக்க வேண்டும்.

சமையல் விவரம்: குடும்பத்தில் பரம்பரையாக நிலவும் வழக்கப்படி சமையல் செய்யலாம். சில வீடுகளில் மிளகு சமையல் வழக்கமாக உள்ளது. சிலர் ஸமாராதனை சமையல் செய்வர். மிளகாய்ப்பழம், மல்லிவிதை, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சேர்க்கலாம். பெருங்காயம் சேர்க்கக் கூடாது. மோர்க் குழம்பும், மிளகு ரஸமும் வைக்க வேண்டும். வெல்லப் பாயஸம், இஞ்சி கறிவேப்பிலைத் துவையல் செய்ய வேண்டும். பக்ஷணமாக வடை, அப்பம், எள்ளுருண்டை செய்யலாம். ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு சமையல் நம் க்ருஹத்தில்தான் செய்ய வேண்டும். வெளியிலிருந்து எடுப்பு சாப்பாடு வாங்கவே கூடாது.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு  வரித்திருக்கும் பெண்டுகள் யாவரும் தலைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து ஒன்பது கஜம் புடவையை அணிந்து மடிசார் மாமிகளாக வர வேண்டும். ஏற்கெனவே பார்த்து வைத்த நல்ல நேரத்தில் வந்திருக்கும் பெண்டுகளை கிழக்கு முகமாக நிற்கச் சொல்லி மஞ்சள் தண்ணீரில் கால் அலம்பி, சந்தனம் குங்குமம் கொடுத்து, போஜனம் செய்ய வாருங்கள் என அழைத்து வரவேற்க வேண்டும்.

அப்படி அழைக்கும் பொழுது ஸுமங்கலிகளாய் இறந்தவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தால் அவர்களின் பெயர்களைச் சொல்லி கையைத் தட்டி அழைக்க வேண்டும்.

அப்படித் தெரியாவிடில் ‘லக்ஷ்மி வா’ என்று பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்.

மருதாணி, நலுங்கு, மஞ்சள் கொடுப்பது முக்கியம். திருமணமாகிச் சென்ற நமது பெண்கள் புடவைக் கலத்திற்கு பக்கத்திலும், பிற பெண்டுகள் மற்ற இலைகளுக்கு முன்பும் அமர வேண்டும்.

எல்லாரும் அமர்ந்ததும், புடவை இலையில் ஆரம்பித்து பிரதக்ஷிணமாகப் பதார்த்தங்களைப்  பரிமாற வேண்டும். தெற்கு திசையில் முடியுமாறு பரிமாறக்கூடாது.

மற்றபடி சாதாரணமாகப் பந்தியில் பரிமாறுவது போலவே பாயஸம், பச்சடி என்ற வரிசைப்படி பரிமாறவும். புடவைக்கலத்துக்கு எல்லாம் பரிமாறிய பின் குழம்பு, ரஸம், தயிர், பானகம், நீர்மோர் ஆகியவற்றைத் தனித்தனி பாத்ரங்களில் அந்தந்த இலைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.

எல்லா கலத்துக்கும் பரிமாறிய பின், வீட்டு மருமகள் அல்லது அவரவர் வழக்கப்படி ஒருவர் நைவேத்யம் செய்ய வேண்டும். (சிலர் புடவைக்கலத்தில்  தொடங்கி ப்ரதக்ஷிணமாக தூபம், கற்பூரம் இவற்றை எல்லாப் பெண்டுகளுக்கும் காட்ட வேண்டும்).

நம் ஆத்து புருஷர்கள் (கணவன், பிள்ளைகள்) அனைவரும் புடவையை ஸுமங்கலிகளாக இறந்து போன நம் முன்னோர்களாகப் பாவித்து புஷ்பம், அக்ஷதை ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்து ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் உத்தரணியில் ஜலம் எடுத்துக் கொண்டு புடவைக்கலத்திலிருந்து தொடங்கி எல்லாருக்கும் தீர்த்தம் வார்த்தபின் கடைசியில் புடவைக்கலத்தில் முடிக்க வேண்டும். ஆபோசனம் ஆனபின் அனைவரையும் நிதானமாகச் சாப்பிடச் சொல்லி வயிராறப் பரிமாற வேண்டும்.

சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் உத்தராபோசனம் செய்யக் கையில் ஜலம் விட வேண்டும். கை அலம்பிய பின்னர், பெண்டுளை கிழக்கு முகமாக உட்காரச் சொல்லி, பானகம், நீர்மோர், சுக்கு – சர்க்கரை கொடுத்துவிட்டு,  வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மஞ்சள், ரவிக்கைத் துணி ஆகியவற்றை ஸுமங்கலிப் ப்ரார்த்தனை நடத்துபவர் தன் சக்திக்கேற்ப அளிக்க வேண்டும். மேலும், புஷ்பம், தக்ஷிணை ஆகியவையும் கொடுக்க வேண்டும்.

புடவைக்கலத்தில் பரிமாறிய உணவை வீட்டில் உள்ள உறவினர் சாப்பிடலாம். பெண்டுகள் சாப்பிட்ட பின்னரே மற்றவர்கள் ஆண் பெண் எல்லாரும் உணவருந்த வேண்டும். பூஜையில் வைத்திருந்த புடவையை அவரவர் வழக்கப்படி வீட்டுப் பெண்களுக்கோ அல்லது ஏழைப் பெண்கள் யாருக்காவது கொடுக்க வேண்டும்.

அரிசியும் சிறிது பாசிப் பருப்பும் போட்டு விட்டு, வெல்லம், ஏலக்காய், நெய் யாவும் எடுத்துக் கொண்டு, கிராமத்து அம்மன் கோயிலில் கொண்டு போய்க் கொடுத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்து விநியோகிக்கச் சொல்லவும். வீட்டுக்காரர்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம். அபிஷேகத்திற்கு பழம், பூ, வெற்றிலைப் பாக்கு கொடுக்கவும்.

இவ்வாறு அவரவர் குல, க்ருஹ ஸம்ப்ரதாயப்படி உரிய காலங்களில் ஸுமங்கலி ப்ரார்த்தனையைச்  சிறப்பாகச் செய்து அனைத்து மங்கலங்களையும், பாக்யங்களையும் பெற இறைவன் அருள்வானாக!

மேற்கண்ட ஸுமங்கலீ ப்ரார்த்தனை என்ற வைபவம் நம் க்ருஹத்தில் நடைபெறும் பொழுது மிகவும் பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் நம் வீட்டில் இறந்த ஸுமங்கலீகளை நினைத்து நடத்த வேண்டும்.

அப்படி நடத்தும் பொழுது ஸுமங்கலீகளாய் மதித்த நம் மூதாதையர்கள் நம்மை மிகவும் ஆசீர்வதித்து நம் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களை நிர்விக்னமாக நடத்தி நமக்கும் ஆசி வழங்குவார்கள். நம் குடும்பத்தில் சூக்ஷ்ம ரூபமாகி இருந்து நம்மை வழி நடத்துவார்கள்.

சாஸ்திரம் கூறும் நல்ல பழக்கங்கள் - தொகுதி 01


1. குளிக்கும்போது நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.

2. தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது. தலையணை மீது உட்காரவும் கூடாது.

3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.

4. கைவிரலை நீக்கியும் கையை உதறியும் சாப்பிடக்கூடாது.

5, சாப்பாட்டை உருட்டிச் சாப்பிடக்கூடாது.

6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ கையையோ நக்கக்கூடாது.

8. இரவில் அடுப்பின் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிட வேண்டும்.

9. வாய்கொப்பளித்தோ எச்சிலையோ வலது பக்கம் துப்பக்கூடாது.

10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.

11. தாமிரப்பாத்திரத்திலும் வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது.

12. ஆமணக்கு இலையிலும் பனை ஓலைக்கூடையிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது. மூங்கில் கூடை தான் பூஜை பொருட்களைப் பாதுகாக்க ஆகச்சிறந்தது.

13. கடும்வெயில், மயானப்புகை, தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல், ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்.

14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

** இனிதே தொடரும் **

எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும்

ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். 

க்ரியா ஸ்நானம்,
காம்ய ஸ்நானம்,
நைமித்திக ஸ்நானம்,
க்ரியாங்க ஸ்நானம் 
மலாபாஹர்ஷண ஸ்நானம், 
நித்ய ஸ்நானம் 
ஆகியவை முக்கிய ஸ்நானங்களாகும்.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்ரத்தில்  இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது,  வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக் கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை. முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். 

சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது,
பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும்  ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக  மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை ம்ருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக்  கூறப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

""இது பெண்களுக்கு மட்டும்"" 

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு ப்ரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக் கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும் பொழுதும்,

"கங்கே ச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.

இறைவன் கணக்கு


ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம். பெருத்த மழை வேறு! அப்போது அங்கே அன்பு என்று மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம் கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றனர் அழகும் அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?'' என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன'' என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன. ஆக எட்டு ரொட்டிகள்! இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் போடலாம். இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும். நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது.

அன்பு கிளம்பும்போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு, எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, "நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார். 

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக் காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. "மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும் நான் பங்கிடச் சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச் சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள் காட்சி தந்து தீர்ப்பும் விளக்கமும் அளித்தார். இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும் அழைத்தார். 

மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்! அழகு எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது! அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டு துண்டுகள்தான் கிடைத்தது! ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான். அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது. தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!

ஹோமம் - சமித்துகளின் பலன்கள்

ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப்  பிடித்தது

அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி-நாசினி.

தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை மரம் : அழகான வடிவமும் வசீகரமும் கிடைக்கும்.

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசமர குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி, சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசுமர குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலமர குச்சி : புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.


வில்வம் :  வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி :  துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி :  கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து :  இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்து அதனால் ஸ்நபனம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து :  அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

வெள்ளை எருக்கு :  இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து :  இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து :  இது புது கிரக சமித்தாகும். இதனால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து :  இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து :  வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னி பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மத்தை தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதிகளும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து :  கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

அருகம்புல் :  இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு :  கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆலசமித்து :  இது ம்ருத்யுஞ்ஜய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் :  ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் :  இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை :  இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு :  இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி :  இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் :  இதன் சமித்தால் ஹோமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் :  இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ :  இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு :  இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித்து நீக்கும். அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் :  அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் :  முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதனுடன் கல்வியும் செல்வமும் தரும்.

உலகே மாயம்

காட்டின் நடுவே சிறு கோயில். அதில் ஒரு குரு. அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தார். மக்களிடையே செல்வதோ, அறிவுரை-போதனை என்று தடபுடல் செய்வதோ கிடையாது.

ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களின் முகப்பொலிவே, அவர்கள், மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது. அவர்கள் குருவிடம் உபதேசம் பெறலாயினர்.

வந்த சிஷ்யர்கள் குருவிடம், ''உங்கள் பெயர் அறிந்து கொள்ளலாமா!!'' என்று கேட்டனர்.

''என் பெயர் ஹோகன்!'' என்றார் குரு.

''ஞான குரு ஹோகன் தாங்களா?''

''இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது!'' என்றார் குரு.

உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுக்கள். இரவு குளிராய் இருக்கவே குளிர்காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மதம் சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த ஹோகன், மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.

பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு-புறவாழ்வு பற்றித் திரும்பியது.

''மனிதனின் புறவாழ்வே மாயம். அகவாழ்வு தான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் ஸாஸ்வதம் (என்றைக்கும் நிலைத்திருப்பது).'' என்றார் ஒருவர்.

''அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல் தானே! கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பது மாயை. தோன்றும் உலகம், தொடரும் வாழ்வு, இதுவே உண்மை!'' என்றார் மற்றொருவர்.

''உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!'' என்பது இன்னொருவரின் வாதம்.

''இல்லை. உலகம் உண்மை. புறநிலையே ப்ரத்யட்சம்!'' என்ற கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.

''உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது!''  மற்றொருவர் விவாதம் இப்படி இருந்தது.

கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள்.

''உங்கள் கருத்து என்ன? உலகம் ப்ரத்யட்சமான உண்மையா? அல்லது, மனோ ரீதியான மாயையா?'' கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.

ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

''அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது, ப்ரத்யட்சக் கண்கூடா?''

''போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயை தான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள் தான். அந்த வகையில் அந்தப் பெரிய பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.''

''அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?''

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும், தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடர்களாயினர்.

உன்னுள் இருக்கும் உன்னை அறிந்துகொள்வது தான் பெரும் பாடு. எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று வெளியே தேடுகிறான் மனிதன், உன்னுள் இருக்கும் இருப்பில் இருந்து வெளியே மனதைச் செலுத்துவது கடலில் வீசும் வலை போல. நிச்சயம், மீன்கள் சிக்குவதைப் போல எண்ணங்களுள் சிக்குண்டு விடுகிறான் மனிதன். எண்ணமே தானாகிறான். தன்னிலை கலைந்து, மனம் எதை நினைக்கிறதோ, அதுவாகவே ஆகி விடுகிறது, உன்னுள் இருந்து அனைத்தையும் பார்ப்பவன் இறைவன்; பார்க்கும் நீயே இறைவன்.

தான் யாரென விடையறியாத மனம் தன்னை வினவாமல், இவ்வுலகில் மற்ற வினாக்களை கேட்டு விடையறிந்து கொண்டேயிருக்கும்.

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்


(ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் என்றும் சொல்வார்கள். இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)


ஷண்முகம் பார்வதீ-புத்ரம் க்ரௌஞ்ச-ஸைல-விமர்தனம்
தேவஸேநா-பதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 1 |

ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும் தேவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

தாரகாஸூர-ஹந்தாரம் மயூராஸன-ஸம்ஸ்திதம்
ஸக்தி-பாணிஞ்ச-தேவேஸம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 2 |

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

விஸ்வேஸ்வர-ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வரதநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 3 |

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும் தேவனும் ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும் மனதைக் கவருகின்றவனும் ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

குமாரம் முநிஸார்-தூலமாநஸானந்த-கோசரம்
வல்லீ-காந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 4 |

குமரக் கடவுளும் சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும் வள்ளியின் கணவனும் உலகங்களுக்கு காரணமானவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

ப்ரளய-ஸ்திதி-கர்தாரம் ஆதிகர்தாரம் ஈஸ்வரம்
பக்தப்-ப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 5 |

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும் முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும் ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

விஸாகம் ஸர்வ-பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா-ஸூதம்
ஸதா-பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 6 |

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும் எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும்  ஜடையை தரித்தவனுமான சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரமிதம் ய: படேத் ஸ்ருணுயாந்நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் லபேத்

எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் ஆறு ஸ்லோகமுள்ள இந்த ஸ்தோத்திரத்தை படிப்பானோ அவன் கோரிய பொருளை உடன் அடைவான். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பான்.

|| இதி ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

கர்மா என்பது யாதெனில்...


ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது, மன்னன் மந்திரியிடம், “மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது!!” என்றார்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டார்.

அடுத்த நாள் மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார். அந்த கடைக்காரனிடம் யதார்த்தமாக கேட்பது போல, வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று, விசாரித்தார்.

அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான். சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன், "என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை; கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்; சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்; நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக்கூட செய்கின்றனர்; ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். 

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.

"இந்த நாட்டின் மன்னன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். அவன் இறந்து போனால் எப்படியும் எரிப்பதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும். எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்!” என்றான் கடைக்காரன்.

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே, மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை, அவரறியாமல் உண்டாக்கி, அப்படிச் சொல்ல வைத்தது என்றுணர்ந்தார் மந்திரி.

மிகவும் நல்லவரான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டார். தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவர் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினார்.

அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று, அரசனிடம், அந்த சந்தனமரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி தந்தார். தங்க நிறத்தையொத்த அந்த சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான். உடனே, அந்தக் கடைக்காரனுக்கு, சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்.

மன்னன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்ற வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. அந்த கடைக்காரனும், இத்தனை நல்ல அரசனை, தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று, தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.

இப்போது சொல்லுங்கள். கர்மா என்றால் என்ன?

கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள், என்றெல்லாம் பதில் கூறினால், அவை உண்மையல்ல.

கர்மா என்பது நமது எண்ணங்களே.

எண்ணம் தான் அடிப்படையானது. எல்லா செயல்களும் (விளைவுகள்) எண்ணத்தில் தான் பிறப்பெடுக்கின்றன. ஆகவே, எண்ணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை நம்முள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் வந்து சேரும்.

அதனால் தான் மஹாகவி பாரதியார் கூட ஒரு கவிதையில் மஹாசக்தியிடம், "நினைவு நல்லது வேண்டும்" என கேட்கிறார்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
"நினைவு நல்லது வேண்டும்"
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

செயல்-விளைவு தத்துவம்


ஒரு விவசாயி தன் நிலத்தை உழுது விதை விதைத்தாகி விட்டது. இனி காத்திருக்க வேண்டியதுதான்.

மனிதனின் பொறுப்பு முடியுமிடத்தில்  இறைவனின் பொறுப்பு தலைதூக்குகிறது. பொறுமையில்லாமல் விவசாயி அவசரப்பட்டால் எதுவும் நிகழாது. மன அழுத்தம் தான் மிஞ்சும். 

லிப்டுக்கான பட்டனை அழுத்தி விட்டீர்கள். லிப்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு இன்னும் வரவில்லை என்று அங்கும் இங்கும் நடந்தால் மன அழுத்தம் தான்.

ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டீர்கள். அச்செயல் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து விட்டீர்கள். இனி காத்திருக்க வேண்டியதுதான்.

பதட்டப்படாமல் காத்திருங்கள். அது அமைதியான வெற்றியை தரும். பதட்டப்பட்டால் மன அழுத்தத்துடன் வெற்றி கிட்டும்.

ஆன்மீக முன்னேற்றம் அடைய தேவையான குணநலன், செய்யும் கடமையை சரியாக செய்து விட்டு
காத்திருப்பதுதான்.

என்ன விளைவு வரவேண்டுமோ அது துளி பிசகாமல் சரியாக நடக்கும். பிரபஞ்ச பேராற்றலின் அடிப்படை சட்டம், 'என்ன நடக்க வேண்டுமோ அது துல்லியமாக நடக்கும்'. செயல்தான் நம்முடையது. மற்றவை இறைவனின் சட்டதிட்டமே.

கடமையைச் செய்வோம். மன அழுத்தமில்லாமல் காத்திருப்போம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எல்லாம் தன்னாலே நடக்கும்.





செக்கு மாடு


முன்பொரு ஞானி இருந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர்; கல்லையும் தங்கம் ஆக்கும் வல்லமை மிக்கவர். அவர் ஒரு ஊருக்கு வந்தார்.

மக்கள் தினம் தினம் அவரை தரிசித்து, அவரவர் குறையைச் சொல்லி யோசனைகள் கேட்டுச் சென்றனர். அவரும், பக்தர்களின் செயல் வெற்றிக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

அந்த ஊர் இளைஞன் ஒருவன், உழைக்காமலே பெரும் செல்வம் ஈட்ட நினைத்தான். அவன் அந்த ஞானியைப் பார்க்கச் சென்றான்.

அவன் அங்கு போன சமயத்தில், ஏழை ஒருவரின் வறுமை நீங்க ஒரு சிறு கல்லை தங்கக் கட்டியாக மாற்றி கொடுத்துக் கொண்டிருந்தார் ஞானி. அதை அந்த வாலிபன் பார்த்தான்.

அவனது மனம் வேகமாக ஒரு கணக்குப் போட்டது. அவனது முறை வந்ததும், ஞானியிடம், "ஐயா, தங்களுக்கு இருப்பது போலவே, கல்லைத் தங்கம் ஆக்கும் சக்தி எனக்கு வேண்டும்." என்று மிகவும் பணிவுள்ளவன் போல் நடித்துக் கேட்டான்.

அவனது உள்நோக்கம் உணர்ந்த ஞானி, அவனைப் பார்த்து, புன்முறுவல் செய்தார்.

பிறகு, ஞானி, சொன்னார்: "தம்பி, இந்த அற்புத ஆற்றல் எனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதை நான் பிறருக்குத் தரமுடியாது. ஆனால் வேறு ஒரு வழி இருக்கிறது!".

"என்ன வழி? சொல்லுங்கள். எவ்வளவு கஷ்டமானாலும் பரவாயில்லை!!" என்று, ஞானி முடிப்பதற்கு முன்பாகவே பரபரத்தான் இளைஞன்.

"ஆற்றங்கரையில் ஒரு கல் இருக்கிறது. அது அதிசயமான கல். அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும்." என ஞானி சொன்ன மறு விநாடியே புறப்பட்டான் இளைஞன். அவன் போன திசை பார்த்து அர்த்தத்தோடு சிரித்தார்.

அவர் நினைத்ததுபோவே, சென்ற அதே வேகத்தில், திரும்பி வந்தான் இளைஞன்.

"குருவே, ஆற்றங்கரையில் ஏராளமான கற்கள் இருக்கின்றன!! அவற்றுள் அந்த அதிசயக் கல்லை கண்டுபிடிப்பது எப்படி ? நீங்கள்தான் வந்து எடுத்துத் தரவேண்டும்." என்று கேட்டான்.

ஞானி, "அது என்னால் முடியாது. நான் தொட்டுவிட்டால், அது, உனக்குப் பயன் தராது. நீயேதான் தேடி எடுக்க வேண்டும்."

"அப்படியானால் அதன் அடையாளத்தையாவது சொல்லுங்கள்!!" எனக் கேட்டான் இளைஞன்.

"ஆற்றங்கரையில் உள்ள கற்களில், எந்தக் கல், நீ கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கிறதோ, அதுவே அதிசயக் கல். வெண்மையான அந்தக் கல், உன் கை பட்டதும், இளம் மஞ்சளாக மாறும். இதுதான் அடையாளம்." என அறிவுறுத்தினார் ஞானி.

அவருக்கு நன்றி சொல்லவும் மறந்து ஓடினான் இளைஞன்.

ஆற்றங்கரையில் இருந்த ஆயிரமாயிரம் கற்களில் ஒன்றை எடுத்தான். அது குளிர்ச்சியாக இருந்தது. அடுத்த ஒன்று. அதுவும் ஜில். மறுபடி மறுபடி, மீண்டும் மீண்டும், எடுக்க எடுக்க எல்லாமே குளிர்ச்சியான கல்லாகவே இருந்தன.

ஒருவேளை, அடையாளம் தெரியாமல் எடுத்த கல்லையே மறுபடி மறுபடி எடுக்கிறோமோ?? அவசர அவசரமாக யோசித்தவன் ஒரு முடிவு செய்தான். அதன்படி, ஒரு கல்லை எடுத்ததும் அது ஜில் என்று இருந்தால் உடனே அதை ஆற்றுக்குள் வீசிவிடுவான்.

இப்போதும் எடுக்க எடுக்க குளுமையான கல்லே வந்தது. ஒருநாள் இரண்டுநாள் என்று ஆரம்பித்து மாதக் கணக்கில் அதே நிலை நீண்டது. கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... ! ஏதோ இயந்திரம்போல் ஆகிப்போனான் இளைஞன். ஆனால் அவன் பேராசை மட்டும் குறையவே இல்லை.

எந்த முயற்சிக்கும் ஒரு பலன் இருக்கும் அல்லவா!! அதுபோலவே, அந்த இளைஞனின் முயற்சிக்குப் பலனாக அந்த அதிர்ஷ்டக்கல் அவன் கைக்கு கிடைக்கும் நாளும் வந்தது.

அன்றும், வழக்கம்போல், ஆற்றங்கரைக் கற்களை எடுத்துத் தேடத் தொடங்கினான் இளைஞன். ஒன்று... இரண்டு... மூன்றாவதாக அவன் எடுத்தது வெண்மையா கல். அந்தக் கல்லில் வழக்கமான குளிர்ச்சி இல்லை. ஆம், அதுதான் அந்த அதிசயக்கல்.

அந்தக் கல்லை எடுத்ததும் இளைஞன் என்ன செய்தான் தெரியுமா? தினம்தினம் கல்லை எடுத்ததும் ஆற்றுக்குள் விட்டெறிந்து மனம் பழகி விட்டதல்லவா!! அந்த அதிசயக் கல்லையும் ஆற்றுக்குள் வீசி விட்டான்.

எதற்காக முயற்ச்சித்தானோ, அதற்கான பலன் பெற, உதவி செய்ய வேண்டிய அவன் மனமே, எதிர்மறையாக செயல்பட்டு விட்டது.

மனம் இயல்பாக பழகிப்போன பாதையில் இருந்து அவ்வளவு சுலபமாக மாறாது. செக்கு மாடு சுற்றுவதைப் போல, ஒரே செயலுக்குள் மனத்தைப் பழக்கி விடக்கூடாது. சூழ்நிலையை அனுசரித்து நடக்கும்படி (dynamic) மனத்தை நிதானமாக இயக்க வேண்டும். ஆரம்பம் முதலே நாம் நேர்மறையாகச் செல்ல மனத்தைப் பழக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிவிட்டு நேர்மறைச் சிந்தைனையைப் பதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், உங்கள் மனமே உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட ஆரம்பித்து விடும்.

முக்கியமாக, இது, குழந்தை வளர்க்கும் தாய்மார்களுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரொம்பவே வேண்டிய ஒன்று. ஏனென்றால், பசுமரத்தில் அறையப்படும் ஆணி, பட்டென்று பதிந்துவிடும்.

நீதி: ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.

ஆரம்பம் முதலே, நல்லவற்றை மனதில் விதைக்கத் தொடங்கிவிட்டால், மனம் நல்லதையே நாடும், நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும்.





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், செக்கு மாடு, மனப்பழக்கம், தொட்டில் பழக்கம்.

வாழ்வில் எது நிம்மதி தரும்?


ஒரு அரசன் ஞானியிடம், "என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான்.

"உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என ஞானி கேட்டார்.

"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை" என்றான்.

"அப்படியானால், ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு" என்றார் ஞானி.

"எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றான் அரசன்.

"என்னிடம் கொடுத்துவிட்டு, இனி, நீ என்ன செய்வாய்?" என்றார் ஞானி.

அரசன், "நான், எங்காவது போய், ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்." என்றான்.

ஞானி, "எங்கோ போய், தெரியாத வேலையைச் செய்வதை விட, என்னிடமே வேலை செய். உனக்குத் தெரிந்தது, நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும், நீ, நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்." என்றார்.

சரி என ஆமோதித்து விட்டு சென்றான் அரசன்.

ஓராண்டு கழிந்த பின், ஞானி, அரசனை காண வந்தார். அரசன் மகிழ்ச்சியாக காணப்பட்டான். ஞானியை, வரவேற்று உபசரித்த அரசன், நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

ஞானி, "நீ இப்போது எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டதற்கு "நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்" என பதிலளித்தான் அரசன்.

ஞானி, "முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்கிற பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா ??"

"வேறுபாடு இல்லை" என்றான் அரசன்.

"அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?" கேட்டார் ஞானி.

அரசனுக்கு விழிப்பு உண்டானது.

ஞானி சொன்னார்: "அப்போது, நீ, இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை, நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். மனத்தின் எண்ணம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல, இந்த உடல் எனதல்ல, இந்த உயிர் எனதல்ல; என்னால் 'உருவாக்கப்படவில்லை'; இவையெல்லாம் எனக்கு 'கொடுக்கப்பட்டவைகளே' என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இனிமேலும், இதே மனநிலையுடன் இந்த நாட்டை நீயே ஆட்சி செய்."

ரயிலில் பயணம் செய்பவன் தன் சுமையை தன் தலையில் வைத்துக் கொள்வதால் ரயிலுக்கு பாரம் குறைந்து விடுமா? அவன் சுமந்தாலும் சுமக்காமல் கீழே இறக்கி வைத்தாலும், ரயில் அந்தச் சுமையையும் சுமையின் உரிமையாளரையும் சுமக்கத் தானே போகிறது!! அதுபோலத்தான் என்னவோ எல்லாவற்றையும் நீயே சுமப்பதாக எண்ணிக் கொள்கிறாய். எல்லாவற்றையும் "நான்" தான் செய்கிறேன் என்ற நினைப்பிருக்கும் வரை உன்னுடைய சுமை உன்னுடையது தான். இறக்கி கீழே வைத்துவிடு. உன்னை மற்றும் உன்னுடைய சுமையை எல்லாவற்றையும் தெய்வத்தின் திருவடியில் வைத்து சரணடைந்து விடு. "நான்" என்ற நினைப்பு அகன்றவுடன் சுகமாகப் பயணம் செய்வாய்.





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, நான், அகங்காரம், சுமை.

நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்!


அந்த நாட்டு அரசன், தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த, மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒவ்வொரு அமைச்சருக்குமே சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

"ஐயோ, நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்.'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

"மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.
உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.
அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும். நீங்கள் கொண்டுவரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும். இந்தப் பயிற்சித் திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.'' என்றார் மன்னர்.

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.
மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்றெண்ணி, அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
"இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.
அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.
சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ, அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி, இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை சரியாக விளக்குகிறது, மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம். அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும். நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா, இல்லை, சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

'அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான். விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி.

நல்லதை மட்டுமே நினைப்போம், நல்லதே நடக்கும்!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, கர்மவினை, பாவம், புண்ணியம், வினைப்பயன், கன்று பசு.

கர்மவினை கதை


அந்த நாட்டின் மன்னன், பலருக்கும் தானமளிப்பதில், பெரும் விருப்பமுடையவன். குறிப்பாக, பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்.

ஒரு நாள் அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவ்விடத்திற்கு மேலே, கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்தது. கழுகின் அலகிலிருந்த, செத்த பாம்பின் வாயிலிருந்து, ஒரு துளி விஷம் உணவுக்குள் விழுந்தது. அதனால், சரியாக அந்த விஷம் இருந்த உணவை உண்ட ஒரு பிராமணன் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை!

பாம்பின் மேல் குற்றமில்லை; ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை; ஏனென்றால் அது தன் உணவை சுமந்து பறந்து கொண்டிருந்தது. மன்னனோ, தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின், "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே. தண்டனையை யாருக்கு வழங்குவது என்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு... நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வழி தெரியாமல் வந்தனர். அங்கு பானை விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியைக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.

அவள் அந்த அந்தணர்களிடம் "கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அந்தணர்களை இந்த மன்னன் சாகடிப்பது போலத் தெரிகிறது!!" என்று சொன்னாள்.

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன், தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து, அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை/ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசக் கூடாது. நாமுண்டு, நம் வேலையுண்டு என்றிருக்க வேண்டும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, கர்மவினை.

செல்லும் பாதை சரிதானா?

முல்லா நஸ்ருதீன் வெளியூர் பயணம் புறப்பட்டிருந்தார். படகைப் பிடிக்க எண்ணி அவசரமாக ஓடினார். படகைத் தவறவிடக் கூடாத நிலையில் இருந்தார்.

அவர் படகுத்துறையை அடைந்தபோது, படகு, நகர்ந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து எட்டிக் குதித்துப் படகில் காலூன்றினார். அப்போது, நிலைதடுமாறி, படகினுள் குப்புற விழுந்துவிட்டார். முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. ஆடை கிழிந்து போயிற்று.

ஆனாலும் மகிழ்ச்சியாக எழுந்தார்.

வியப்போடு அவரைப் பார்த்த பயணிகளிடம், "நான் தாமதமாக வந்தாலும் படகைப் பிடித்துவிட்டேன்." என ஆனந்தித்துக் கொண்டே கூறினார்.

பயணியருள் ஒருவர், "உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை முல்லா!! இந்தப்படகு புறப்பட்டுப் போகவில்லை. கரையை நோக்கியல்லவா வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் என்ன அவசரம்?" என்றார்.

எங்கோ சென்றுசேர நினைத்து, வாழ்நாளெல்லாம் ஓடி, இறுதி சமயத்தில், உங்களது ஓட்டம் வீண் என்று தெரியவந்தால், அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமிருக்காது. புறப்பட்டுச் செல்லும் படகிற்குப் பதிலாக, திரும்பவரும் படகில் உட்கார்ந்தது போலாகிவிடும்.

அடுத்தவர் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்காதீர்கள். அவர் சென்றுசேர வேண்டிய இடம் வேறாக இருக்கலாம். உங்கள் இலக்கை நோக்கிய பாதையில் பயணிப்பவர்களோடு செல்லுங்கள். அதுவே இருவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

அவசரகதியில் என்ன ஏதென்று தெரியாமல் பயணிக்காதீர்கள். முல்லா அந்தத் தவறைத் தான் செய்தார். படகு எங்கு செல்கிறதென்று, சரியானவரிடம் கேட்டு உறுதி செய்திருந்தால், அவர் தவறான படகில் ஏறி ஆடையை கிழித்திருக்க மாட்டார். ஆகவே, உங்கள் இலக்கிற்கான, சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா என்று அவ்வப்போது உறுதி செய்து கொண்டு பயணியுங்கள். சற்று நேரமானாலும் பரவாயில்லை; சரியான பாதையில் பயணியுங்கள்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, முல்லா கதை, முல்லா நஸ்ருதீன், சரியான பாதை, வாழ்க்கை பயணம், படகு.

குறுந்தொகையில் கொஞ்சம்


குறுந்தொகை, காதலர்களுக்குப் பிடிக்கும் நூல் என்பார்கள். ஏனென்றால், அது பழந்தமிழரின் காதல் இன்பத்தை பதிவாக்கி கொண்டுள்ளது. அது காதலால் பீடித்தவர்களுக்கு மட்டுமல்ல, காதலைப் பிடித்தவர்களுக்கும் விருப்பமான நூல் தான். காலம் காப்பாற்றிக் கொடுத்த பொக்கிஷங்களில் குறுந்தொகையும் ஒன்று. அந்த காதல் கடலில் நான் ரசித்த சில நீர்த் துளிகளை 'தேனித் தென்றல்' வாயிலாக உங்களிடம் பகிர்கிறேன். "குறுந்தொகையில் கொஞ்சம்" எனும் தலைப்பில் ஒவ்வொரு பாடலாக எழுதுகிறேன். எல்லோரும் ரசியுங்கள்.
______________________________________________

திணை: குறிஞ்சி
செய்யுள் எண்: 08

மூங்கில்கள் அடர்ந்து செழித்த மலைநாடு அது. ஓங்கி நிமிர்ந்திருந்த பசும் மூங்கிலொன்றை யானை வளைத்துத் தின்கிறது. அப்பொழுது, பிடியிலிருந்து நழுவிய மூங்கில், சட்டென்று நிமிர்ந்து விடுகிறது. இது எப்படி இருக்குமென்றால், பூட்டிய குதிரையை அவிழ்த்து விட்டால், எப்படி விருட்டென்று துள்ளிக் குதித்து ஓடுமோ, அதுபோலிருக்கும்.

இப்படிப்பட்ட மலைநாட்டு இளைஞன் ஒருவன், பெண்ணொருத்தியைக் கண்டான்; காதல் கொண்டான். அவளும் இவன் மீது காதலுற்றாள்.

ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்காமல் இருந்தனர். பெண் மட்டும், அவள் தோழியிடம் தெரியப்படுத்தி இருந்தாள். அவன் எப்பொழுது சொல்லுவான் என தோழியை அனுதினமும் நச்சரிப்பாள். அவளும் பெண் தானே!

ஒரு நாள், அவன், தோழியிடம் வந்து அந்தப் பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தான். தோழி அவனிடம், "அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து கேட்டு விட்டாய். நானும் அவளிடம் கேட்டுச் சொல்கிறேன்." என்று வந்து விட்டாள்.

தோழி, "அடியே, நீ காத்திருந்தது வீண் போகவில்லை. அவனே வந்தான். உன்னை காதலிப்பதாகச் சொன்னான். காதல் வலி தாங்க முடியாமல் தவிக்கிறானாம். நீயும் தவிப்பது அவனுக்கு தெரியாதல்லவா!! இத்தனை நாள் கழித்து, மூங்கில் போல, அவன் வளைந்து வந்திருக்கிறான். பகுமானம் பண்ணாமல் ஏற்றுக்கொள். இல்லையென்றால், பிடி நழுவி, சென்று விடுவான். அப்பறம் நீ தான் கிடந்து அல்லாட வேண்டும். ஒழுங்காக சம்மதித்து விடு.." என்றாள்.

அந்த குறுந்தொகைப் பாடல் இதோ,

விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப - நம் மாண் நலம் நயந்தே.

இச்செய்யுளை இயற்றியவர் பெயர் கிடைக்காததால், செய்யுளிலிருந்தே எடுத்து, 'விட்ட குதிரையார்' என்று பெயரிட்டுள்ளனர்.

எவ்வளவு அழகான உதாரணத்துடன் புத்திமதி சொல்லியிருக்கிறாள், தோழி! தாம் சார்ந்த நிலத்திலிருந்தே உதாரணத்தை எடுத்திருக்கிறாள். ஏனென்றால், பார்த்துப் பழக்கப்பட்ட விஷயங்களை, உதாரணமாகச் சொல்லும் போது, எளிமையாக மனதில் ஏறி விடும். அதிலும், இந்த உதாரணம், காதலுக்கு மிகப் பொருத்தம்!

நெடுநாளாக கட்டிவைத்த குதிரையை அவிழ்த்து விட்டால், திரும்ப பிடித்துக் கட்டுவது சற்று சிரமம் தான். அது போல, நெடுநாளாக மனதில் பூட்டி வைத்த காதலை, ஒருவர் கூறும் போதே (உங்களுக்கும் பிடித்திருந்தால்) ஏற்றுக் கொள்வது தான் உசிதம். இல்லையெனில், யானையின் வாய்ப் பிடியிலிருந்து நழுவிய மூங்கில் போல ஆகிவிடும். திரும்பவும், அதை வளைத்து, பிடிக்குள் கொண்டு வர, ரொம்ப நேரமாகி விடும்.

அதனால், உங்களுக்குப் பிடித்தவர் ப்ரபோஸ் செய்தால், ரொம்ப பிகு பண்ணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், பிறகு, அவருக்காக நீங்கள் அலைய வேண்டும்.




____________________________________________
Keywords: குறுந்தொகை, Kurunthogai, விட்ட குதிரையார், மூங்கில், யானை, காதல் உரைத்தல், தோழி கூறுதல், குறிஞ்சி திணை.

நிம்மதியாக வாழ்வது எப்படி?


கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.

அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். 

அங்கிருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே! இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே!! என்ன நடந்தது?'' என்று கேட்டார். 

வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்: ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு தான் போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? 

அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

நம் பிள்ளைகளை அளவு கடந்து நேசிக்கிறோம். ஆனால், அதே அளவு நேசத்தை, பிள்ளைகள், நம்மிடம் திரும்பச் செலுத்தாவிட்டால் வருத்தப்படுகிறோம். பொருளின் மீதான ஆசையோ, உறவின் மீதான பாசமோ, எதுவாயினும் அளவுடன் இருப்பதே சிறந்தது. அளவிற்கு மீறினால், அதற்கான எதிர்பார்ப்பும் கூடி விடும். எதிர்பார்த்தது பூர்த்தியடையா விட்டால், மனம் துன்பப்படும். ஆகவே அளவோடு பழகுங்கள், மன அமைதியுடன் வாழுங்கள். மனத்தின் அமைதி தான் வாழ்வை நிறைவாக வாழ்ந்ததன் அடையாளம்.

இளமையில் எதிலெல்லாம் ஆசை வைத்திருந்தோமோ, முதுமையில் அதிலிருந்தெல்லாம் ஒதுங்கி வாழவும் பழக வேண்டும். 40 வயதில் உங்கள் மகன் மீது பாசத்தைப் பொழிவது நல்லது. ஆனால், அவனுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை முடித்த பிறகும், அதே பாசமழையைப் பொழிவதும் அதை அவனிடம் இருந்து எதிர்பார்ப்பதும் தவறு.

சரி, மனசை எப்படி அடக்குவது?

மனசை அடக்கும் வித்தை புத்திக்கு மட்டும் தான் உண்டு. மனம் ஒன்றிற்கு ஆசைப்படும் பொழுது, புத்தியிடம் ஆலோசனை கேளுங்கள். நல்லது எது என்பதை புத்தி சொல்லிவிடும்.

புத்தி என்றால், எல்லோருக்கும் இருக்கின்ற சிற்றறிவு அல்ல. புத்தி என்பது தெளிந்த ஞானத்தை குறிக்கும். தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்தும் நல்லறிவே, ஞானம். அதுவே புத்தி. அப்படிப்பட்ட புத்திக்கு மனம் அடிமையானால் நிம்மதியாக வாழலாம்.






____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, ஆசை, துன்பம், நிலையாமை, பந்தபாசம், மனம், புத்தி.

குடும்பத்தின் தலைவர் யார்?


இரவு நேரம். மலையோரத்தில் அழகான குடிசை வீடு. அந்த வீட்டில் பெட்ரோமேக்ஸ் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம், வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

விளக்கைச் சுற்றி விட்டில் பூச்சிகளும் சிறு சிறு வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. விளக்கு பிரகாசமாக சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த எலி, விளக்கைப் பார்த்து, "விளக்கே, நீ சுடர் விட்டு எரிவதால் தான் இந்த இடமே வெளிச்சமாக இருக்கிறது. இதற்கு யார் காரணம்?" என்று கேட்டது.

விளக்கு பக்கத்தில் இருந்த தீப்பெட்டி, "நான் தான் காரணம். நான் தான் இந்த விளக்கைப் பற்ற வைத்தேன். நான் இல்லாவிட்டால் ஏது இந்த வெளிச்சம்!" என்றது.

"இல்லை இல்லை... விளக்கு எரிய நான் தான் காரணம். ஏனென்றால் நான் தான் விளக்கெரிய எண்ணெய்யை இழுத்துக் கொடுக்கிறேன்." என்றது திரி.

இதை கவனித்த எண்ணெய் சொன்னது: "அதுஎப்படி?? நான் இருந்தால் தானே உங்களுக்கு வேலை. விளக்கு எரிய நான் தானே முக்கியம். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்." என்று அதட்டலாகவே கூறியது.

"சும்மா பிதற்றாதீர்கள்... நீங்களெல்லாம் நிற்பதற்கு நான் தான் உதவுகிறேன். நான் இல்லாவிட்டால் எண்ணெய் வழிந்து விடும். அப்புறம் எப்படி விளக்கு எரியும்?? உங்கள் எல்லோரையும் தாங்கி நிற்பது நான் தான். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்" என்றது குடுவை.

இப்படி எல்லோருமே, விளக்கு எரிய 'நான் தான் காரணம்! நான் தான் காரணம்!' என்று சொல்ல, எலி குழப்பமடைந்தது.

இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த புறா, "எலியே, நீ நாளைக்கு காலையில் வா. விளக்கு எரிய யார் காரணம் என்று சொல்கிறேன்." என்றது.

மறுநாள் காலை, அந்த வீட்டுக்காரர் விளக்கை கழற்றித் துடைத்து வெயிலில் காய வைத்திருந்தார். தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை யாவும் தனித்தனியாகக் கிடந்தன.

எலியும் புறாவும் வந்தன.

தனித்தனியாகக் கிடந்த தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை இவற்றைப் பார்த்து புறா, "உங்களில் யாரால் தனியாக இப்பொழுது விளக்கை எரிய வைக்க முடியுமோ, அவங்க முன்னாடி வரலாம்." எனச் சொன்னது.

நான்கு பேரும் திருதிருவென முழித்தனர்.

"நீங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் விளக்கு எரியும். உங்களில் ஒருவர் இல்லையென்றால் கூட விளக்கு எரியாது." என்றது புறா.

உண்மைதான். குடும்ப வாழ்க்கையும் அப்படித் தான். ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருப்பது தான் குடும்பம். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்புமே முக்கியமானது. என்னுடைய பங்களிப்பு தான் பெரியது, என்ற அகங்காரம் வந்துவிட்டால், அது எல்லோரையும் பாதிக்கும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மகன், மகள், சகோதரன், சகோதரி என ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலிருக்கும் கடமைகளை இறுமாப்பில்லாமல் செய்தாலே போதும். குடும்பம் தழைக்கும், நிம்மதி கிடைக்கும். ஒருத்தருக்கொருத்தர் அனுசரித்து வாழ்வதே நிம்மதியான குடும்பம்.

குடும்பம் என்பது மக்களாட்சி போன்றது. அதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. அதனால், ஒவ்வொருவரும் தலைவர்களே!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, petromax light, ஒற்றுமை, குடும்பம்.

கடவுள் ஏன் சோதிக்கிறார் ?


குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.

"யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்." என்றார் குரு.

ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல்,
கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்று கேட்டான்.

"நல்ல கேள்வி. இதற்கான பதிலை உனக்கு நாளைய தினம் விளக்குகிறேன்" என்றார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தார்கள். மாணவர்களுக்கு முன்பாக, மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இரண்டு வைக்கப்பட்டன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.

"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களை கேட்டார்.

மாணவர்கள், ஒரு கணம் கழித்து, "இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவைதான்."

"இவற்றுக்குள் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று குரு கேட்டார்.

'தெரியவில்லை' என்று கூறிய மானர்களிடம், "இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றார் குரு.

மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைக் கீழே தள்ளிக் கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியைக் கவிழ்த்தார். அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாதல்லவா? இரண்டும் ஒன்றே தான் என நினைத்துக் கொண்டீர்கள். ஆனால், உள்ளே இருந்த பொருளில் வித்தியாசம் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டி விட்டது." என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.

"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித்தான். நாம் சோதனைகளைச் சந்திக்கும் வரை சகஜமாக, நல்லவர்களாக, இருக்கிறோம். ஆனால் சோதனையைச் சந்திக்கும் போதுதான் நம்முள்ளே இருக்கும் உண்மையான குணம் வெளியே வருகிறது. நமது உண்மையான எண்ணங்களும் மனப்பான்மையும் சோதனையில் தான் வெளிப்படுகிறது. நமதுஉண்மையான குணத்தைப் பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளைத் தருகிறார். சோதனைகள் தான் நம்மை நமக்கே தெரியப்படுத்துகின்றன." என்றார்.

"மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக் கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என குரு கேட்டதும்,

அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடி!" என்றனர்.

"இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே!! இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்றுயோசித்து பாருங்கள்!... கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோளிற்கு அவன் செவி சாய்ப்பதில்லை.

இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறிவதற்கே!! அவன் அறிந்து கொள்ள அல்ல. அவனுக்குத்தான் உள்ளே இருப்பது சந்தனமா, சாக்கடையா, என்று நன்றாக தெரியுமே!!

அவன் சோதிப்பது நம்மை நாமே தெரிந்து கொள்ளதான். நம்மை நாம் அறிந்து கொண்டால்தான் நம்மை நாம் திருத்திக் கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய் விடும்."





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது.

வாழ்வின் சுவை


மூன்று ஞானிகள் ஓரிடத்தில் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.

ஒரு ஞானி, கண்மூடி அமர்ந்திருப்பார்; பேசமாட்டார். இரண்டாவது ஞானி, கண்திறந்து அமைதியாக அமர்ந்திருப்பார்; ஏதாவது கேட்டால் பதில் சொல்வார். மூன்றாமவரோ, சிரித்தபடி இருப்பார்; மிக இயல்பாக இருப்பார்; தாம் சொல்வதே சரி என்று எவரிடமும் வாதிட மாட்டார். ஆனால் முகத்தில் மாறாத சிரிப்பு.

ஒருநாள் அவர்களுக்கு முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. அதன் கையில் அழகான கிண்ணம். கிண்ணம் நிறைய பழச்சாறு.

முதல் ஞானி கண் மூடி அமர்ந்திருந்தார். தேவதை ஒருத்தி வந்திருக்கிறாள் என்பதை தன் ஞானத்தால் அறிந்து கொண்டார்.

இரண்டாவது ஞானி தேவதையை பார்த்தார். அதன் கையில் இருந்த கிண்ணத்தையும் பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

சிரித்தபடி அமர்ந்திருந்த மூன்றாவது ஞானியோ தேவதையை பார்த்து கேட்டார்: "தேவதையே கையில் என்ன கிண்ணம். அதில் என்ன இருக்கிறது?".

தேவதை கூறியது: "ஐயா, ஞானிகளே! இந்த கிண்ணம் நிறைய 'வாழ்க்கை' என்கிற பழச்சாறு நிரம்ப இருக்கிறது. சுவைத்துப் பாருங்கள்." என்றது.

கண் மூடியே அமர்ந்திருந்த முதல் ஞானி, "முதலில் இதை எடுத்துக் கொண்டு போய்விடு. இதன் வாடையே எனக்கு பிடிக்காது. வாழ்க்கை என்றாலே எத்தனை வேதனை. இந்த பழச்சாறு கொஞ்சம் அருந்தினாலும் போதும் மீண்டும் மீண்டும் நான் பிறந்து துன்பப்பட வேண்டும். போ போ போய்விடு." என்றார்.

தேவதை சிரித்துக்கொண்டே இரண்டாவது ஞானியைப் பார்த்து, "நீங்களாவது சுவைத்துப் பாருங்கள்", என்றது.

இரண்டாவது ஞானி, "என்ன இது?? அவர், நீ, கொண்டு வந்த பழச்சாற்றை ஒரு துளி கூட சுவைத்துப் பார்க்காமல் இப்படிச் சொல்லிவிட்டாரே!! நான் அவர் போல் இல்லை. சுவைத்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்." என்று, தேவதை கொடுத்த பழச்சாற்றை ஒரு வாய் குடித்தார்.

மறுநொடி அப்படியே துப்பி விட்டார். "அப்பப்பா!! என்ன கசப்பு.. என்ன கசப்பு.. இதை எப்படி சுவைத்துக் குடிக்கச் சொல்கிறாய்? அவர் சொன்னது சரிதான் போல இருக்கிறது. வாழ்க்கை என்றாலே முடிவில் கசப்புதான் போலும்!" என்றார்.

இப்பொழுது தேவதை மூன்றாவது ஞானியைப் பார்த்தது. அவர் சிரித்தபடியே அமர்ந்து இருந்தார். அவரிடம் கிண்ணத்தை நீட்டியது. ஞானி, கிண்ணத்தை எடுத்தார்; பழச்சாற்றை மடமடவென்று குடித்து விட்டு கிண்ணத்தை வைத்தார். அப்புறம் பரவசமும் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக வாய்விட்டு சிரித்தார்.

மற்ற இரண்டு ஞானிகளுக்கும் வியப்பு... "என்ன இது?? எந்தக் கருத்தையும் சொல்லாமல் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே!!" என்றார்கள்.

அதற்கு மூன்றாவது ஞானி சொன்னார்: "கருத்து சொல்ல இதிலென்ன இருக்கிறது? வாழ்க்கை என்கிற பழச்சாற்றை அப்படியே குடித்து விட வேண்டியதுதானே! அப்போதுதான் அதன் முழு சுவையும் தெரியும். அந்த சுவையை நான் உங்களுக்கு எப்படி உணர்த்த முடியும்? உங்களில் ஒருவர் ஒரு துளி பழச்சாற்றை கூட சுவைக்கவில்லை. இன்னொருவரோ ஒரு வாய் குடித்துவிட்டு முழு சாறும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டிவிட்டார். நான் முழுவதும் குடித்ததால் என்ன சுவை என்பது எனக்கு தானே தெரியும். நான் தானே அதை உணர்ந்தவன். நீங்களும் அதை உணர வேண்டுமென்றால் பழச்சாற்றை முழுவதும் குடியுங்கள்" என்றார்.

நம்மில் பல பேர் அந்த முதலிரண்டு ஞானிகளைப் போலத் தான் வாழ்க்கையைப் பார்க்கிறோம். எதையும் நாம் முழுமையாக அனுபவித்துப் பார்ப்பதில்லை. வாழ்க்கையை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிற பொழுது தான் அதன் சுவையை நாம் அறிய முடியும். சொற்களால் விளக்க முடியாத அந்த அற்புதத்தை முழுமையாக வாழ்ந்தால் தான் உணர முடியும்.

இந்த உலகம் நல்லதா? அல்லது, கெட்டதா? என்று கேட்டால், அது வாழ்பவரின் கையில் தான் இருக்கிறது, என்று சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கான உலகத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது தான் உண்மை. ஒவ்வொருவரும் அவரவருக்கான உலகத்தையும் வாழ்க்கையையும் அவரவர்களே உருவாக்கிக்கொள்ள முடியும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது.