கர்மா என்பது யாதெனில்...


ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது, மன்னன் மந்திரியிடம், “மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது!!” என்றார்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டார்.

அடுத்த நாள் மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார். அந்த கடைக்காரனிடம் யதார்த்தமாக கேட்பது போல, வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று, விசாரித்தார்.

அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான். சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன், "என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை; கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்; சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்; நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக்கூட செய்கின்றனர்; ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். 

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.

"இந்த நாட்டின் மன்னன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். அவன் இறந்து போனால் எப்படியும் எரிப்பதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும். எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்!” என்றான் கடைக்காரன்.

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே, மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை, அவரறியாமல் உண்டாக்கி, அப்படிச் சொல்ல வைத்தது என்றுணர்ந்தார் மந்திரி.

மிகவும் நல்லவரான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டார். தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவர் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினார்.

அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று, அரசனிடம், அந்த சந்தனமரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி தந்தார். தங்க நிறத்தையொத்த அந்த சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான். உடனே, அந்தக் கடைக்காரனுக்கு, சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்.

மன்னன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்ற வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. அந்த கடைக்காரனும், இத்தனை நல்ல அரசனை, தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று, தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.

இப்போது சொல்லுங்கள். கர்மா என்றால் என்ன?

கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள், என்றெல்லாம் பதில் கூறினால், அவை உண்மையல்ல.

கர்மா என்பது நமது எண்ணங்களே.

எண்ணம் தான் அடிப்படையானது. எல்லா செயல்களும் (விளைவுகள்) எண்ணத்தில் தான் பிறப்பெடுக்கின்றன. ஆகவே, எண்ணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை நம்முள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் வந்து சேரும்.

அதனால் தான் மஹாகவி பாரதியார் கூட ஒரு கவிதையில் மஹாசக்தியிடம், "நினைவு நல்லது வேண்டும்" என கேட்கிறார்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
"நினைவு நல்லது வேண்டும்"
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக