மாண்புமிகு மகாபாரத மன்னன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் இருந்து அவருக்குப் பல்வேறு சேவைகளும் பணிவிடைகளும் செய்த “உத்தவர்” தனக்கென ஏதும் கிருஷ்ணரிடம் கேட்டதில்லை. அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவதாரப் பணி நிறைவுறும் தருவாயில் உத்தவருக்கு தேவையான வரங்கள் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கண்ணனின் செயல்கள் உத்தவருக்கு புரியாத புதிராகவே இருந்தன. அதனால் அவற்றிற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ள விரும்பினார். அதன் தொடர்ச்சியை உரையாடல் வடிவில் இங்கு எழுதியுள்ளேன்.

“பெருமானே, நீ மற்றவர்களை வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழியோ வேறு. மகாபாரதத்தில் நீ ஏற்ற பாத்திரத்திலும் புரிந்த செயல்களிலும் எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. இது எனக்கு மட்டுமல்ல; உன்னைப் படித்த பலருக்கும் இக்கேள்விகள் எழலாம் என்று நம்புகிறேன். அதனால் அவற்றுக்கான காரண காரியங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நிறைவேற்றுவாயா?” என்று கேட்டார் உத்தவர்.

விளக்கம் தருவதற்கு ஆமோதித்த கண்ணனைப் பார்த்து கேட்க ஆரம்பித்தார் உத்தவர்.

“கிருஷ்ணா, பாண்டவர்களின் உற்ற நண்பனான உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதையும் நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, தருமன் சூதாடச் செல்லும் முன்பு, ஒரு நல்ல நண்பனாக தருமனிடன் எடுத்துச் சொல்லி, ஏன் அதைத் தடுக்கவில்லை?

போகட்டும். தருமன் விளையாட ஆரம்பித்ததும் அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருக்கும் படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி புகட்டி இருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். அதோடு அவனை விட்டிருக்கலாம். அவன் தனது தம்பிகளைப் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஜெயித்தால் இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று துரியோதனன் சவால் விட்டான். உனது தெய்வீக சக்தியால், அப்பொழுதாவது பகடைக்காய்கள் தருமனுக்கு சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அப்பொழுதும் நீ ஒன்றும் செய்யவில்லை. திரௌபதியின் துகிலை மாற்றான் ஒருவன் உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது சென்று “துகில் தந்தேன்; திரௌபதி மானம் காத்தேன்” என்று மார்தட்டிக் கொள்கிறாய். குந்தியின் குலவதுவை முடியைப் பிடித்து மாற்றான் ஒருவன் இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு மிச்சப்பட்ட மானம் என்ன இருக்கிறது? நீ எதைக் காப்பாற்றியதாக பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன், நல்ல நண்பன்! இத்தனை நிலைகளிலும் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று. நம்மில் மகாபாரதம் படித்த சிலர் கேட்கும் இக்கேள்விகளை உத்தவர் அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார்.

பகவான் சிரித்த முகத்துடன், “உத்தவரே, விவேகம் உள்ளவனே வெல்ல வேண்டும் என்பது உலக நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால் தருமன் தோற்றான்.” என்றார்.

உத்தவர் ஏதும் புரியாது குழம்பி நிற்க, பகவான் தனது விளக்கத்தைத் தொடர்ந்தார்.

“துரியோதனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் ஏராளமான பணமும் ஆஸ்தியும் இருந்தன. ஆனாலும் அதனை வெளியில் சொல்லாமல் “பணயம் நான் வைக்கிறேன்; என் மாமா சகுனி பகடையை உருட்டி சூதாடுவார்” என்றான். அது அவனது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு “நானும் பணயம் வைக்கிறேன்; என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீ கிருஷ்ணன் பகடையை உருட்டுவான்” என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளை சகுனியால் பகடையில் போடத்தான் முடியுமா? அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால் போட முடியாதா?

போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். அதையாவது மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதியின் வசத்தால் சூதாட ஒப்புக் கொண்ட விஷயம் நண்பன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. ஸ்ரீ கிருஷ்ணன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென்று என்னிடமே வேண்டிக் கொண்டான்.

என்னை யாராவது பிராத்தனையால் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன். தருமனின் சகோதரர்கள் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் தருமனை திட்டிக் கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

திரௌபதியின் சிகையை துச்சாதனன் பிடித்த பொழுது அவள் என்னைக் கூப்பிடவில்லை. அந்த கணத்தில் திரௌபதி அவளது பலத்தை நம்பியே சபையில் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். நல்ல வேளை, துச்சாதனன் துகிலுரித்த பொழுதாவது தனது பலத்தால் போராடாமல் “அபயம் கிருஷ்ணா!” என்று குரல் கொடுத்தாள். பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற அப்பொழுது தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. உடனே அவள் மானம் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது எந்தத் தவறும் இல்லை.” என்று விளக்கம் கொடுத்தார் கிருஷ்ணர்.

“அருமையான விளக்கம் கண்ணா, அசந்து விட்டேன்! ஆனால் உன்னிடம் இன்னொரு கேள்வி கேட்கலாமா” என்றார் உத்தவர்.

“கேள்” என்றார் கண்ணன்.

“உன் விளக்கத்திலிருந்து பார்த்தால், நாங்கள் கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீதியை நிலை நாட்ட நீயாக வந்து உன் அடியார்களுக்கு உதவ மாட்டாயா?” எனக் கேட்டார் உத்தவர்.

புன்னகைத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டு நிற்பவன். அது தான் தெய்வ தர்மம்.” என்றார் கண்ணன்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நாங்கள் செய்யும் தீமைகளை எல்லாம் நீ அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? “ என்றார் உத்தவர்.

“உத்தவரே, நான் கூறிய விளக்கத்தின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் பொழுது, உங்களால் தவறுகளையோ தீய செயல்களையோ நிச்சயமாக செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் எப்போதும் எல்லோருடனும் சாட்சி பூதமாக இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா!” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

எத்தனை அழகான தத்துவம்! எவ்வளவு உயர்ந்த சத்தியம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை ஆபத்தில் இருந்து காக்க அவரை உதவிக்கு அழைக்கும் ஒரு உணர்வு தானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும் போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்! அதனை மறந்து விட்டு எப்படி செயலாற்ற முடியும்! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விளக்கத்தில் உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.


இந்த தத்துவத்தைத் தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். கண்ணன் அர்ஜுனனுக்காக தேரைத் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காக போராடவில்லை. அது தான் பகவானின் மேன்மை!

- C. விஸ்வநாதன்


Courtesy: சுப்பையா வாத்தியார் வகுப்பறை