ஆரஞ்சு பழமும் நாத்திகனும்

அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும்" என்று, அவன் கட்சிக்காரர்கள், அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை,
வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள்...." என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாக பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக, "கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்துவிட்டு...

"யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்!"
என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த, பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான். தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே!!" எனக் கோபங் கொண்டான் நாத்திகன்.

பழத்தை உரித்தவன் சுளை சுளையாகத் தின்று கொண்டே, "பொறு.. பொறு.. தின்று முடித்து விட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" எனச் சொல்லியவாறு ரசித்துத் தின்று கொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே! நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்?"
என்றான் நாத்திகன் ஆங்காரத்துடன்!

"கடவுள் யார்? அவர் எப்படிபட்டவர்? அவரின் ஆற்றல் என்ன? என்பதை, நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுப் பார்த்தால் தானே உனக்குத் தெரியும்!! இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சுப் பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது, பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி, வழிபட்டு, நமக்கு வழிகாட்டி,  பாரம்பரியமாக கொண்டாடிவரும் கடவுளை, இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்? அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்?" என்றான் அந்த மெகாக்குடிகாரன்!!

கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக