கர்மவினை கதை


அந்த நாட்டின் மன்னன், பலருக்கும் தானமளிப்பதில், பெரும் விருப்பமுடையவன். குறிப்பாக, பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்.

ஒரு நாள் அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவ்விடத்திற்கு மேலே, கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்தது. கழுகின் அலகிலிருந்த, செத்த பாம்பின் வாயிலிருந்து, ஒரு துளி விஷம் உணவுக்குள் விழுந்தது. அதனால், சரியாக அந்த விஷம் இருந்த உணவை உண்ட ஒரு பிராமணன் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை!

பாம்பின் மேல் குற்றமில்லை; ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை; ஏனென்றால் அது தன் உணவை சுமந்து பறந்து கொண்டிருந்தது. மன்னனோ, தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின், "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே. தண்டனையை யாருக்கு வழங்குவது என்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு... நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வழி தெரியாமல் வந்தனர். அங்கு பானை விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியைக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.

அவள் அந்த அந்தணர்களிடம் "கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அந்தணர்களை இந்த மன்னன் சாகடிப்பது போலத் தெரிகிறது!!" என்று சொன்னாள்.

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன், தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து, அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை/ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசக் கூடாது. நாமுண்டு, நம் வேலையுண்டு என்றிருக்க வேண்டும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, கர்மவினை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக