குறுந்தொகையில் கொஞ்சம்


குறுந்தொகை, காதலர்களுக்குப் பிடிக்கும் நூல் என்பார்கள். ஏனென்றால், அது பழந்தமிழரின் காதல் இன்பத்தை பதிவாக்கி கொண்டுள்ளது. அது காதலால் பீடித்தவர்களுக்கு மட்டுமல்ல, காதலைப் பிடித்தவர்களுக்கும் விருப்பமான நூல் தான். காலம் காப்பாற்றிக் கொடுத்த பொக்கிஷங்களில் குறுந்தொகையும் ஒன்று. அந்த காதல் கடலில் நான் ரசித்த சில நீர்த் துளிகளை 'தேனித் தென்றல்' வாயிலாக உங்களிடம் பகிர்கிறேன். "குறுந்தொகையில் கொஞ்சம்" எனும் தலைப்பில் ஒவ்வொரு பாடலாக எழுதுகிறேன். எல்லோரும் ரசியுங்கள்.
______________________________________________

திணை: குறிஞ்சி
செய்யுள் எண்: 08

மூங்கில்கள் அடர்ந்து செழித்த மலைநாடு அது. ஓங்கி நிமிர்ந்திருந்த பசும் மூங்கிலொன்றை யானை வளைத்துத் தின்கிறது. அப்பொழுது, பிடியிலிருந்து நழுவிய மூங்கில், சட்டென்று நிமிர்ந்து விடுகிறது. இது எப்படி இருக்குமென்றால், பூட்டிய குதிரையை அவிழ்த்து விட்டால், எப்படி விருட்டென்று துள்ளிக் குதித்து ஓடுமோ, அதுபோலிருக்கும்.

இப்படிப்பட்ட மலைநாட்டு இளைஞன் ஒருவன், பெண்ணொருத்தியைக் கண்டான்; காதல் கொண்டான். அவளும் இவன் மீது காதலுற்றாள்.

ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்காமல் இருந்தனர். பெண் மட்டும், அவள் தோழியிடம் தெரியப்படுத்தி இருந்தாள். அவன் எப்பொழுது சொல்லுவான் என தோழியை அனுதினமும் நச்சரிப்பாள். அவளும் பெண் தானே!

ஒரு நாள், அவன், தோழியிடம் வந்து அந்தப் பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தான். தோழி அவனிடம், "அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து கேட்டு விட்டாய். நானும் அவளிடம் கேட்டுச் சொல்கிறேன்." என்று வந்து விட்டாள்.

தோழி, "அடியே, நீ காத்திருந்தது வீண் போகவில்லை. அவனே வந்தான். உன்னை காதலிப்பதாகச் சொன்னான். காதல் வலி தாங்க முடியாமல் தவிக்கிறானாம். நீயும் தவிப்பது அவனுக்கு தெரியாதல்லவா!! இத்தனை நாள் கழித்து, மூங்கில் போல, அவன் வளைந்து வந்திருக்கிறான். பகுமானம் பண்ணாமல் ஏற்றுக்கொள். இல்லையென்றால், பிடி நழுவி, சென்று விடுவான். அப்பறம் நீ தான் கிடந்து அல்லாட வேண்டும். ஒழுங்காக சம்மதித்து விடு.." என்றாள்.

அந்த குறுந்தொகைப் பாடல் இதோ,

விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப - நம் மாண் நலம் நயந்தே.

இச்செய்யுளை இயற்றியவர் பெயர் கிடைக்காததால், செய்யுளிலிருந்தே எடுத்து, 'விட்ட குதிரையார்' என்று பெயரிட்டுள்ளனர்.

எவ்வளவு அழகான உதாரணத்துடன் புத்திமதி சொல்லியிருக்கிறாள், தோழி! தாம் சார்ந்த நிலத்திலிருந்தே உதாரணத்தை எடுத்திருக்கிறாள். ஏனென்றால், பார்த்துப் பழக்கப்பட்ட விஷயங்களை, உதாரணமாகச் சொல்லும் போது, எளிமையாக மனதில் ஏறி விடும். அதிலும், இந்த உதாரணம், காதலுக்கு மிகப் பொருத்தம்!

நெடுநாளாக கட்டிவைத்த குதிரையை அவிழ்த்து விட்டால், திரும்ப பிடித்துக் கட்டுவது சற்று சிரமம் தான். அது போல, நெடுநாளாக மனதில் பூட்டி வைத்த காதலை, ஒருவர் கூறும் போதே (உங்களுக்கும் பிடித்திருந்தால்) ஏற்றுக் கொள்வது தான் உசிதம். இல்லையெனில், யானையின் வாய்ப் பிடியிலிருந்து நழுவிய மூங்கில் போல ஆகிவிடும். திரும்பவும், அதை வளைத்து, பிடிக்குள் கொண்டு வர, ரொம்ப நேரமாகி விடும்.

அதனால், உங்களுக்குப் பிடித்தவர் ப்ரபோஸ் செய்தால், ரொம்ப பிகு பண்ணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், பிறகு, அவருக்காக நீங்கள் அலைய வேண்டும்.




____________________________________________
Keywords: குறுந்தொகை, Kurunthogai, விட்ட குதிரையார், மூங்கில், யானை, காதல் உரைத்தல், தோழி கூறுதல், குறிஞ்சி திணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக