நிம்மதியாக வாழ்வது எப்படி?


கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.

அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். 

அங்கிருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே! இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே!! என்ன நடந்தது?'' என்று கேட்டார். 

வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்: ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு தான் போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? 

அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

நம் பிள்ளைகளை அளவு கடந்து நேசிக்கிறோம். ஆனால், அதே அளவு நேசத்தை, பிள்ளைகள், நம்மிடம் திரும்பச் செலுத்தாவிட்டால் வருத்தப்படுகிறோம். பொருளின் மீதான ஆசையோ, உறவின் மீதான பாசமோ, எதுவாயினும் அளவுடன் இருப்பதே சிறந்தது. அளவிற்கு மீறினால், அதற்கான எதிர்பார்ப்பும் கூடி விடும். எதிர்பார்த்தது பூர்த்தியடையா விட்டால், மனம் துன்பப்படும். ஆகவே அளவோடு பழகுங்கள், மன அமைதியுடன் வாழுங்கள். மனத்தின் அமைதி தான் வாழ்வை நிறைவாக வாழ்ந்ததன் அடையாளம்.

இளமையில் எதிலெல்லாம் ஆசை வைத்திருந்தோமோ, முதுமையில் அதிலிருந்தெல்லாம் ஒதுங்கி வாழவும் பழக வேண்டும். 40 வயதில் உங்கள் மகன் மீது பாசத்தைப் பொழிவது நல்லது. ஆனால், அவனுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை முடித்த பிறகும், அதே பாசமழையைப் பொழிவதும் அதை அவனிடம் இருந்து எதிர்பார்ப்பதும் தவறு.

சரி, மனசை எப்படி அடக்குவது?

மனசை அடக்கும் வித்தை புத்திக்கு மட்டும் தான் உண்டு. மனம் ஒன்றிற்கு ஆசைப்படும் பொழுது, புத்தியிடம் ஆலோசனை கேளுங்கள். நல்லது எது என்பதை புத்தி சொல்லிவிடும்.

புத்தி என்றால், எல்லோருக்கும் இருக்கின்ற சிற்றறிவு அல்ல. புத்தி என்பது தெளிந்த ஞானத்தை குறிக்கும். தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்தும் நல்லறிவே, ஞானம். அதுவே புத்தி. அப்படிப்பட்ட புத்திக்கு மனம் அடிமையானால் நிம்மதியாக வாழலாம்.






____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, ஆசை, துன்பம், நிலையாமை, பந்தபாசம், மனம், புத்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக