வாழ்வில் எது நிம்மதி தரும்?


ஒரு அரசன் ஞானியிடம், "என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான்.

"உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என ஞானி கேட்டார்.

"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை" என்றான்.

"அப்படியானால், ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு" என்றார் ஞானி.

"எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றான் அரசன்.

"என்னிடம் கொடுத்துவிட்டு, இனி, நீ என்ன செய்வாய்?" என்றார் ஞானி.

அரசன், "நான், எங்காவது போய், ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்." என்றான்.

ஞானி, "எங்கோ போய், தெரியாத வேலையைச் செய்வதை விட, என்னிடமே வேலை செய். உனக்குத் தெரிந்தது, நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும், நீ, நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்." என்றார்.

சரி என ஆமோதித்து விட்டு சென்றான் அரசன்.

ஓராண்டு கழிந்த பின், ஞானி, அரசனை காண வந்தார். அரசன் மகிழ்ச்சியாக காணப்பட்டான். ஞானியை, வரவேற்று உபசரித்த அரசன், நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

ஞானி, "நீ இப்போது எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டதற்கு "நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்" என பதிலளித்தான் அரசன்.

ஞானி, "முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்கிற பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா ??"

"வேறுபாடு இல்லை" என்றான் அரசன்.

"அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?" கேட்டார் ஞானி.

அரசனுக்கு விழிப்பு உண்டானது.

ஞானி சொன்னார்: "அப்போது, நீ, இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை, நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். மனத்தின் எண்ணம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல, இந்த உடல் எனதல்ல, இந்த உயிர் எனதல்ல; என்னால் 'உருவாக்கப்படவில்லை'; இவையெல்லாம் எனக்கு 'கொடுக்கப்பட்டவைகளே' என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இனிமேலும், இதே மனநிலையுடன் இந்த நாட்டை நீயே ஆட்சி செய்."

ரயிலில் பயணம் செய்பவன் தன் சுமையை தன் தலையில் வைத்துக் கொள்வதால் ரயிலுக்கு பாரம் குறைந்து விடுமா? அவன் சுமந்தாலும் சுமக்காமல் கீழே இறக்கி வைத்தாலும், ரயில் அந்தச் சுமையையும் சுமையின் உரிமையாளரையும் சுமக்கத் தானே போகிறது!! அதுபோலத்தான் என்னவோ எல்லாவற்றையும் நீயே சுமப்பதாக எண்ணிக் கொள்கிறாய். எல்லாவற்றையும் "நான்" தான் செய்கிறேன் என்ற நினைப்பிருக்கும் வரை உன்னுடைய சுமை உன்னுடையது தான். இறக்கி கீழே வைத்துவிடு. உன்னை மற்றும் உன்னுடைய சுமையை எல்லாவற்றையும் தெய்வத்தின் திருவடியில் வைத்து சரணடைந்து விடு. "நான்" என்ற நினைப்பு அகன்றவுடன் சுகமாகப் பயணம் செய்வாய்.





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, நான், அகங்காரம், சுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக