அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!

தமிழக அரசியல் களம் பல்வேறு தலைவர்களை சந்தித்து விட்டது. நல்லவர்களை அடையாளப்படுத்துகிற அதே களம் தான் நயவஞ்சகர்களையும் வாழ வைக்கிறது. எத்தனை காலம் இவர்களால் நிலைக்க முடிகிறது என்பதல்ல கேள்வி. அவர்கள் நிலைத்து நின்ற வரை, நமக்காக என்ன செய்தார்கள் என்பதையாவது ஆராய வேண்டுமல்லவா?

நாமும் எத்தனையோ தலைவர்களை தேர்ந்தெடுத்து விட்டோம். ஆனால் இன்னமும் எதையோ எதிர்பார்த்து தானே காத்திருக்கிறோம்! எதைத்தான் நாம் இந்தத் தலைவர்களிடம் எதிர்பார்க்கிறோம்? இலவசப் பொருட்களையா? இல்லை இனாமாகக் கொடுக்கும் சலவைத் தாள்களையா?

இலவசங்களை வாங்கும் நம்மில் எத்தனை பேர் அதனைப் பயன்படுத்துகிறோம் என்று கணக்கெடுத்தால் விரல்களை விட்டு எண்ணி விடலாம். கொடுக்கும் இலவசங்களை 'வேண்டாம்' என்று எதிர்க்காவிட்டாலும் 'தேவையில்லை' என்று விலகிச் செல்லும் துணிச்சல் நமக்கு ஏன் இன்னும் வரவில்லை? வெள்ளைத் தாள்களுக்கு இன்னமும் ஏன் நம் உள்ளங்கள் பறிபோகின்றன? வசதியான ஏழைகளாகத் தானே நம் வாழ்க்கைத் தரம் இருந்து வருகிறது.

கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக இதுவரை நாம் கேட்டிருக்கிறோமா? காசை வாரி இறைத்தால், எதுவும் நம் காலில் வந்து விழும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். கல்வியை வியாபாரப் பொருளாக்கியதும் அதைக் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் உருவாக்கி விட்டதுவே காலத்தின் அவல நிலையாகி நிற்கிறது. ஆனாலும் கூட இன்னமும் வேலை வாய்ப்புகள் வீட்டு வாசலுக்கு வரும் முன்னரே வெள்ளை முடிகள் எட்டிப் பார்த்து விடுகின்றதே! காசு கட்டிப் படிக்க வைத்தவர்களின் பிள்ளைகளெல்லாம் கரையேறி இருக்கிறார்களா? இல்லையே, ஏன்? கலைமகளை விலை கொடுத்து வாங்க முயல்வதன் விளைவுகள் தான் இவை அத்தனையும். காசுக்கு அடி பணியாதவள் தான் கலைவாணி. அவள் வாசித்து வாழும் இதயங்களுக்குள் மட்டுமே ஓசை இல்லாமல் உறைந்து நிற்பவள்.

ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது கல்வி முறை மாற்றப்படுவது போல் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதில்லை. மதிப்பெண்கள் கூடுகிறதே தவிர மனிதப் பண்புகள் குறையத் தொடங்கி விட்டன. இதற்கு மாணவர்களை மட்டும் குறை சொல்லி விட்டு மற்றவர்கள் மறைந்து நிற்க முடியாது. ஏனென்றால் அவர்களை வழி நடத்த வேண்டிய ஆசிரியர்களுக்கே வாழ்க்கைப் பாதுகாப்பு குறைந்திருக்கிறது.

நம் குறைகளைக் களைய, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஒருவர் நம்மை மறப்பது தான் இங்கு நிதர்சனமாகி விடுகிறது. தவறு செய்யும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விரைவாக விடுதலை செய்யப்படும் அளவுக்கு சட்டத்தின் சல்லடையில் சமத்துவம் பெருகவில்லை. வடிகட்டப்பட வேண்டிய தவறுகள் எல்லாம் வாய்க்கால் வழியாகப் பாய்ந்து விளைநிலத்தை விஷமாக்குகின்றன.

பயிர் சேதமடைந்தால் சமாளித்து விடலாம். ஆனால் நிலமே பாழ்பட்டு வருவது தான் நம்மை நிலை குலைய வைக்கிறது. ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் என்பது விளைநிலம் போன்றது. அதில் விளையும் பயிர்களெல்லாம் அந்நாட்டில் வாழ்பவர்கள். அந்த நிலத்தை உழுது, பண்படுத்த வேண்டிய விவசாயிகள் தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஆவர். நிலத்தைப் பழுது பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களால் ஆளப்பட வேண்டியவர்கள் மக்களை ஆள்வது தான் நம் மக்களாட்சியின் மகத்துவம். நிலம் பழுதடைந்தால் நாம் எங்கு நின்று வளர்வது?

தவறுகளை தட்டிக் கேட்காமல் அவற்றை வளர்த்து விடும் ஒரு சமூகம், எவ்வளவு காலம் அதன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்? வள்ளுவரின் குறளையே நம் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி வளைத்துப் பொருள் கொள்ளும் வல்லவர்கள் அல்லவா நாம் ! கம்ப்யூட்டர் முதல் கட்சி வரை காசு பார்க்கும் வழக்கத்தையே விரும்புகின்றன. கலாச்சாரங்களை மேம்படுத்த கால அவகாசம் கிடையாது!

காலம் எனும் மருந்தை வைத்து இங்கே பல அரசியல் காயங்கள் ஆற்றப்படுகின்றன. ஒரு காயத்தின் வலியை மறக்கச் செய்ய இன்னொரு காயம் ஊதி பெரிதாக்கப்படுகிறது. ஆனால் ஆற்றப்பட்ட காயத்தின் ஆறாத வடுக்களை அரசியல் ஆபரணங்கள் அலங்கரித்து மறைக்கின்றன.

பொதுநலக் கொள்கைகளுக்காகவே உயிர் நீத்தவர்கள் மண்ணில், கோட்டையை பிடிப்பது மட்டுமே கொள்கை என்று புறப்பட்டு விட்ட கூட்டத்தை, நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்களும் நானுமல்லவா இதை அனுமதித்தோம். அதனால் ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும், அதற்கான ஆட்டத்தை அமைதியாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு தண்டனை நமக்கு கிடையாது. எங்களுக்கு இது வேண்டும் என்று கேட்டுப் பெரும் உரிமை உள்ளதையே மறந்தே விட்டோம். மாறாக,  என்ன போடுவார்கள் என்று எதிர்பார்த்து நிற்கும் அளவுக்கு தான் இன்னமும் இருக்கின்றோம்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது, நமது அரசியல் நாகரிகமும் இந்த மண்ணின் ஆதி தர்மமும், வேரிலே புழு வைத்து விட்டதோ என்று நம்மில் சிலரைப் பதற வைக்கிறது.

எழுந்து நிற்காமல் இன்னமும் எத்தனை காலங்களுக்கு இந்த அவலங்களை நாம் அனுமதிக்கப் போகிறோம்? எது நடந்தாலும் இது சகஜம் என்ற இயல்புக்கு எப்போது வந்தோம்? என்னால் முடியாது என்று எல்லாரும் ஒதுங்கி நின்றால் யார் தான் இதைச் சரி செய்வது? காலம் தீர்மானிக்கும் என்றா இந்த சுதந்திரக் கோட்டையை நமக்கு கட்டி வைத்துச் சென்றார்கள்?

"நமக்கு மேலேயிருந்து, இறைவன் நம்மை கவனிக்கிறான்" என்ற நம்பிக்கை இருக்கும் வரை தவறு செய்ய மனம் மறுக்கிறது. அந்த நம்பிக்கை மறையும் பொழுதோ அல்லது மறக்கும் பொழுதோ தான் மனித மனம் தடம் மாறிச் செல்கிறது.

தவறுகளை செய்து விட்டு அதை நியாயப்படுத்தும் சமூகமாக நாம் மாறத் தொடங்கி விட்டோம். இது எவ்வளவு பெரிய அபத்தம்! எதிர்க் காற்றிலே நாம் எச்சில் துப்புகிறோமே! சிறிது நேரத்தில் நம்மையல்லவா அது நாறடித்து விடும்.

இதைக் காட்டிலும் அபத்தமான செயல், பாவம் செய்தவர்கள் பிராயச்சித்தம் (தண்டனை) தேடுவதற்குப் பதிலாக பரிகாரம் தேடுவது தான். பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள் கூட பரிகாரம் செய்து விட்டு பாவம் தொலைந்ததென பல்லைக் காட்டுகிறார்கள். பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் உண்டென்றால் இந்த பூமி எப்பொழுதோ சுபிட்சம் அடைந்திருக்க வேண்டுமே! மாதம் மும்மாரி அல்லவா பொழிந்து கொண்டிருக்க வேண்டும்!

பிழைகளை மன்னித்து விடலாம். தவறுகளை கண்டித்தோ அல்லது கருணை காட்டியோ திருத்தி விட முடியும். குறைகளைப் பரிகாரங்கள் மூலமாக நிவர்த்தி செய்யலாம்.
( Message Courtesy:  'சென்னை' ஜெயஸ்ரீ )

ஆனால், பாவங்களைப் போக்க என்ன செய்வது?

நிச்சயமாக இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களது திரைப்பாடல் ஒன்று இதற்கு வெளிச்சமிடுகிறது. "இது சத்தியம்" என்ற திரைப்படத்தின் பாடல் ஒன்றில்,

"பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா
பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா"

என்று தீர்க்க தரிசனமான வரிகளை கூறிச் சென்றுள்ளார். கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதையே தான் கூறியுள்ளார். மனிதர்கள் பாவம் செய்யும் பொழுது இறைவன் தண்டிப்பதில்லை. ஏனென்றால் அவன் செய்யும் பாவங்களே இறுதியில் அவனை தண்டித்து விடும். கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறுவதன் அர்த்தமும் இது தான். பாவம் செய்பவன் அதற்கான தண்டனையில் இருந்து ஒரு போதும் தப்பவே முடியாது. பாவச் செயல்களை செய்யும் பொழுது எளிதாக தோன்றும்; ஒரு வித போதை உணர்வு உள்ளூர கிளர்ச்சியூட்டி மேலும் தொடரச் செய்யும். ஆனால் போதை தெளிந்த பின்பு தான், வந்த பாதை தவறென்று புரிய வரும்.

நமக்கு மேலே ஒருவன் நம்மை நோட்டமிடுகிறான் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள். அந்த ஒருவன் இறைவனாகவும் இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை இருக்கும் வரை நமக்கு நாமே நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். சலவைத் தாட்கள் நிரப்பிய பெட்டிகள் யாவும் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை போன்றவை. பார்க்க அழகாக இருக்குமே தவிர, பண்படுத்த உதவாது. நான் ஒருவன் திருந்தினால் இந்த நாடு திருந்தாது தான். நாம் ஒட்டு மொத்தமாக திருந்தினால் உலகமே நம்மை உரிமையோடு கொண்டாடும். தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே தாயகம் சிறக்க முடியும்.

நமசிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!


**C. விஸ்வநாதன்

ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் திருக்கோயில்
முத்துலாபுரம், வத்தலகுண்டு வட்டம், திண்டுக்கல் மாவட்டம்


திருக்கோயில் அறிமுகம் :-

கோயில்கள் மனித இனத்தின் வரலாற்றையும் அழகியல் மரபுகளையும் மற்றும் அவர்களது உணர்வுக் குவியல்களையும் தாங்கிக் கொண்டு வியாபித்திருக்கின்றன. ஒரு கோயில் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்குலத்திலும் பிரம்மாண்டமான உழைப்பும் சொல்லப்படாத ரகசியங்களும் புதைந்திருக்கின்றன. கலியுகத்தில் பலவிதமான துன்பங்கள் மனிதனைத் துரத்துவதால், அவற்றை விலக்கிக் கொள்வதற்கு ஒரு ஆதார இடமாகவும் விளங்குகிறது.

தமிழகத்தில் சிவன், விஷ்ணு, மற்றும் பிரம்மா ஆகிய மூவரும் ஒரே தலத்தில் அருள்புரியும் கோயில்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முப்பெருந் தெய்வங்களை ஒரே தலத்தில் தரிசிப்பது கிடைத்தற்கரிய புண்ணியமாகும். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து செம்பட்டி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவிலுள்ள முத்துலாபுரம் எனும் ஊரில் நதிக்கரையில் குபேர ஸ்தலத்தில் முப்பெருந் தெய்வங்களையும் தரிசிக்கலாம்.

திருக்கோயில் சிறப்புகள் :-

மூலவர் ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் மற்றும் திருத்தல நாயகி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆகியோராவர். தமிழகத்தில் குபேர தலத்தில் முப்பெருந் தெய்வங்களுடன் வளர்நிதிகளான சங்கநிதி மற்றும் பத்மநிதி அருள்புரியும் சிறப்பு வாய்ந்த ஒரே தலம் இஃதாகும். முதன்மைத் தெய்வமான சிவபெருமானுடன் சிவகாமி, விஷ்ணு, பிரம்மா, கணபதி, தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்கா, பைரவர், நவகிரக நாயகர்கள், பலிபீடம், கொடிமரம், அதிகார நந்தி ஆகிய தெய்வங்கள் ஒரே இடத்தில் சிவாகம விதிகளின் படி “ஓம்” எனும் பிரணவ அட்சர வடிவமைப்பில் வரிசையாக அமைந்துள்ள சக்தி வாய்ந்த திருக்கோயிலாகும்.

நதிக்கரையில் முப்பெருந் தெய்வங்களும் ஒன்றாக அருள்புரிவதால் பாவங்களை நீக்கி வரமருளும் புண்ணியத் தலமாகும். காசியில் காணப்படுவது போலவே வடக்கிலிருந்து தெற்காக பாயும் வஞ்சிஓடைக் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் சிவபெருமான் யுகத்தின் பெயரைத் தாங்கி சிதம்பர நாயகராக கலியுகத்தில் உயிர்களுக்கு மோட்சம் வழங்குகிறார். குபேர தலமான இத்திருக்கோயிலின் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ உமா சமேதரரும் தல விருட்சமாக வில்வம் மற்றும் வன்னி மரங்களும் தீர்த்தங்களாக வஞ்சித் தீர்த்தம் மற்றும் பிரம்ம கூபம் ஆகியவை காணப்படுகிறது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகவும் விளங்குகிறது.

திருக்கோயில் புராணம் :-

சிவபெருமானின் இனிய நண்பரான குபேரனின் அழகாபுரி (இன்றைய இலங்கை) ஆட்சி நிர்வாகத்தை ராவணன் கைப்பற்றிய பிறகு, குபேரன், சிவனை காண கைலாயம் செல்லும் வழியில் இப்பொழுது கோயில் அமைந்துள்ள வஞ்சி நதிக்கரையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். தவத்தில் மூழ்கிய குபேரனுக்கு முப்பெருந் தெய்வங்களும் நேரில் காட்சியளித்தனர். சிவபெருமான் குபேரனுக்கு வளர்நிதிகளான சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகிய இரண்டையும் அருளிச் சிறப்பித்தார். சிவபெருமான் வரமளித்ததற்கு நன்றி செய்யும் விதமாகவும் தனது எண்ணம் விரைவாக ஈடேற நின்ற இயற்கைக்கு நன்றி செய்யும் விதமாகவும் சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகிய இருவரை இத்தலத்தில் தங்கியிருந்து கலியுகத்தில் இங்கு வந்து சிவனை வழிபடும் மக்களுக்கு கல்வி மற்றும் தன வளர்ச்சியை வழங்குமாறு குபேரன் பணித்தார். இதற்கான குபேரபீடம் கருவறையின் உள்ளும் வளர்நிதிகளின் புடைப்புச் சிற்பங்கள் கருவறை வாயிலின் இருபுறங்களிலும் கற்றுளிகளில் குறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதியின் கைகளில் செல்வச் செழிப்பினை குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கும் பத்மநிதியின் கைகளில் கல்விச் செல்வத்தினை குறிக்கும் அடையாளமான தாமரையும் காணப்படுகிறது.

ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் அமைந்துள்ள இடம் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் ஆளுகையில் அவர்களது அரசவை குருவான தொட்டையசாமி நாயக்கர் அவர்களின் பெயரால் “தொட்டையங்கோட்டை துவராபுரி” என அழைக்கப்பட்டது. தொட்டையசாமி நாயக்கர் கனவில் சிவபெருமான் துறவி வடிவில் தோன்றி மும்மூர்த்திகளையும் ஒரே ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்து கோயிலெழுப்ப அருள்பாலித்தார். அதற்கடுத்த நாள் அரண்மனை வேலையாட்கள் கழுதையில் ஏற்றிய மிளகு மூட்டையுடன் வஞ்சிநதியை கடக்கையில் அங்கிருந்த ஒரு துறவி சிறிது மிளகு கேட்டார். அவர்கள் அதை மிளகு மூட்டையல்ல; ஆமணக்கு முத்துகள் என்று கூறிச் சென்றனர். அரண்மனையில் மூட்டைகளை அவிழ்த்துக் காட்டிய பொழுது மிளகு அனைத்தும் ஆமணக்கு முத்தாக இருந்ததைக் கண்ட மன்னரும் நாயக்கரும் அரச பரிவாரங்களோடு துறவியை தேடி வஞ்சி நதிக்கரை வந்தனர். அங்கு சிவலிங்கமும் வளர்நிதிகளின் சின்னமும் இருந்ததைக் கண்டார்கள். நாயக்கர் கனவில் துறவியாக  வந்த சிவபெருமானே வஞ்சிக்கரையிலும் துறவியாக வந்து கோயிலெழுப்ப உகந்த இடத்தை குறிப்பால் அடையாளப்படுத்தியாக எண்ணி பாண்டிய அரசின் முழு பங்களிப்புடன் கற்கோயில் கட்டப்பட்டது. கருவறை, அர்த்த மண்டபம், நந்தி மண்டபம் ஆகியவை கற்றுளியாக கட்டப்பட்டன. தெய்வங்களை சிவாகம விதிகளின் படி “ஓம்” எனும் பிரணவ அட்சர வடிவிற்குள் நிர்மாணித்தனர். திருக்கோயில் பராமரிப்பிற்காகவும் வழிபாட்டுச் செலவுகளுக்காகவும் இறையிலி நிலம் வழங்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட பிற்கால பாண்டிய அரசின் வீழ்ச்சியால் இறையிலி நிலங்களின் மானியம் கிடைக்கப் பெறாமல் பராமரிப்பின்றி விடப்பட்டது.

கி.பி.15 நூற்றாண்டில் சோழ நாட்டிலிருந்து பாண்டிய தேசம் வந்த பல்வேறு சமுதாய மக்கள் அவர்களின் குல தேவதைகளை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். மேலும் அவ்வழியில் வியாபார நிமித்தமாக சென்றோர் சிவலிங்கத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டுச் சென்றார்கள். அவ்வாறு வழிபட்டுச் சென்றோரின் வியாபாரம் விருத்தியாகவும் லாபம் சீராகவும் இருந்ததால் மற்ற வியாபாரிகளும் வழிபடலாயினர். மேலும் அவர்களது வாழ்க்கையும் வளமுடன் வளர்ந்தது. இதனால் இத்தலம் வியாபார விருத்தி வழங்கும் ஸ்தலமாகவும் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்து வரமருளும் புண்ணிய ஸ்தலமாகவும் மக்களால் நம்பப்பட்டது.

மக்கள் செல்வாக்கு காரணமாக கி.பி.18 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் ஆளுகையில் சந்தையூர் பாளைய அரசால் விரிவுபடுத்தி புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது கி.பி.1760 ஆம் ஆண்டு ஹைதர் அலி படைக்கும் முகமது யூசுப்கானின் படைக்கும் இடையே வத்தலக்குண்டு பகுதியில் நடந்த போரினால் இத்திருக்கோயிலும் சேதமடைந்தது. கருவறை விமானம், மகா மண்டபம், முன் மண்டபம், குலதெய்வ சன்னதிகள் ஆகிய சுண்ணாம்புக் காரை பகுதிகள் சந்தையூர் ஜமீனால் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரையிலும் திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்ற நாயக்க மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக இப்பகுதியில் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இத்திருக்கோயில் சேதப்படுத்தப்பட்டு புனரமைப்பு வேலை தொடரப்படாமலே விடுபட்டு விட்டது.

இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த பிறகு திரு. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தலைமை அர்ச்சகராக பொறுப்பு வகித்த காலத்தில் அவரது தலைமையில் புனரமைப்பு தேவைகளுக்காக பக்தர்களிடமிருந்தும் நிதி ஆதாரங்கள் பெறப்பட்டு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டனர். புனரமைப்பு வேலையின் பொழுது சில பாண்டியர் கலைப்பாணி கற்சிலைகள் தரைக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. கருவறை விமானம், பரிவார மற்றும் குலதெய்வ சன்னதிகள் போன்ற முக்கியப் பகுதிகள் புனரமைக்கப்பட்டு கருவறையில் புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. கி.பி.2011 ஆம் ஆண்டு சிவகாமி அம்பாள், கால பைரவர், லிங்கோத்பவர், கருடாழ்வார், விஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வப் பிரதிஷ்டையோடு முழுமையாக புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஹோம குண்டத்தின் அக்னி வலம் சுழித்து எழுந்ததும் நன்னீராட்டின் பொழுது கருவறையின் மேலே கருடன் மூன்று முறை வலமிருந்து இடமாக வட்டமடித்ததும் இத்திருக்கோயிலின் புனிதத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.

குல தெய்வங்கள் :-

சந்தையூர் ஜமீனால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்ற பொழுது திருக்கோயிலைச் சுற்றி இருந்த குல தேவதைகளுக்கும் தனிச் சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெரியாச்சி அம்மன், கருப்பசாமி, காத்தவராயன் போன்ற குலதேவதைகள் இங்கு வழிபடப்படுகின்றனர். பெரியாச்சி அம்மன் மற்றும் கருப்பசாமி ஆகிய தெய்வங்கள் பல்வேறு சமூகத்தினருக்கும் குல தெய்வங்களாக இருப்பதால் வழிபாட்டின் பொழுது சாதி ரீதியான கருத்து வேறுபாடுகள் வராமல் தடுக்க பெரியாச்சி அம்மனை மட்டும் சுத்தமுக தெய்வமாக திருக்கோயில் வளாகத்தினுள் கிழக்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர். பெரியாச்சி அம்மனே பேச்சியம்மனாக வழிபடப்படுகிறாள். ஆனால் பெரியாச்சி அம்மன் எனும் பேச்சியம்மன் இங்கு சுத்தமுக தெய்வமாக இருப்பதால் சூலைப் படையல் செய்யும் வழக்கம் கிடையாது. கருப்பசாமிக்கான வழிபாடு அனைவருக்கும் ஒரே விதமாக இருப்பதால் திருக்கோயில் வளாகத்திற்கு வெளியே பிரதிஷ்டை செய்தனர். நின்ற கோலத்தில் கம்பீர உருவம், தலைப்பாகை, இடைக்கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, மற்றும் ஓங்கிய கையில் அரிவாளுடன் அருள்புரிகிறார்.

திருக்கோயில் விழாக்கள் :-

ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி தொட்டு மூன்று நாட்களுக்கு விழா நடைபெறும். இதனை “மாசிப் பச்சை விழா” என்று அழைப்பார்கள். மஹா சிவராத்திரி இரவில் சுவாமிப் பெட்டி பூசாரிபட்டியில் இருந்து ஊர்வலமாக வந்து 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 சேனைகளுக்கும் பள்ளையம் பிரித்து கொடுக்கப்படும். மூலவருக்கு நான்கு கால வழிபாடுகள் அபிஷேகத்துடன் கடைபிடிக்கப்படும். அதற்கடுத்த நாள் அமாவாசை திதியில் பக்தர்கள் அவர்களது குல தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். குல தெய்வங்களுக்கு முப்பூசை கொடுப்பவர்கள் கருப்பசாமி சன்னதியின் முன்பு கொடுப்பார்கள். அன்று மாலை வேளையில் கழுமரத்தில் சேவல் பலியிடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்ட பின் மூன்றாம் நாள் வளர்பிறையில் நடை திறக்கப்பட்டு நித்திய வழிபாடுகள் தொடரப்படும். மேலும் பக்ஷ பிரதோஷம், மார்கழி திருவாதிரை, ஆடிப் பெருக்கு போன்ற சிவத்தல விழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை சிறப்புகள் :-

கருவறையின் பிரநாளம், அரைத்தூண், போதிகை, தேவகோட்டம், மீன் சின்னம் ஆகியவை பாண்டியர் கட்டடக் கலையை காட்டுகின்றன. சிற்பக்கலை மிகுந்துள்ள இத்திருக்கோயிலில் கருவறை மற்றும் அர்த்த மண்டப வெளிச்சுவரில் சிவபெருமானின் மகேஷ மூர்த்தங்களான சந்திரசேகரர், கங்காளர், ரிஷபாரூடர், கஜாசுர சம்ஹாரர், காளிகா தாண்டவ மூர்த்தி போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் காணப்படும் கரமகுடம், கேசபந்தம், அளவான ஆபரணம், சன்னமான முப்புரிநூல் ஆகியவை பிற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் அமைந்துள்ளன. பேச்சியம்மனின் சிரசில் “ஜ்வால கேசம்” (கதிர் மகுடம்) காணப்படுவதால் அவள் தீமைகளை அழித்து மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கும் சக்தி உடையவள் என அறியப்படுகிறது.

கோயில் கருவறையில் குபேர பீடம் காணப்படுவதால் பூர்வீக சொத்து இழப்பு, தொழில் முடக்கம், கூட்டுத்தொழில் மோசடி இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்கள் பாதிக்கப்பட்டோர்களுக்கும் ஆசைகளை நீக்கி வேண்டுவோருக்கும் தோஷம் நீக்கி வரமருளும் தலமாக விளங்குகிறது. இங்கு சிவபெருமானுடன் அருளும் சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகியோரை வழிபட்டால் கல்வி மற்றும் தன வளர்ச்சி ஏற்படும்.

திருக்கோயில் நடைதிறப்பு விபரங்கள் :-

சாதாரண நாட்கள் : 6am-10am | 5pm-7pm
சிறப்பு நாட்கள்     : 6am-12pm | 4am-7pm 
போக்குவரத்து விபரங்கள் மற்றும் தொடர்புக்கு :-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து காந்திகிராமம் செல்லும் நகரப் பேருந்தில் அல்லது சித்தையன்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி “முத்துலாபுரம் சிவன் கோயில்” என்று கேட்கலாம். வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தாணி (Auto-rickshaw) வசதியும் உள்ளது. அலைபேசி வழி தொடர்புக்கு 07829256213 (விஸ்வநாதன்), 09750120685 (நடராசன்) மற்றும் கோயில் இணையதள முகவரி “http://kchidambara.wix.com/kchidambara”.


**C. விஸ்வநாதன்