சொல்லுக்குள் அடக்கி விளக்க முடியாத
சுந்தரப் பெருமைகள் உனதல்லவா!
உந்தன் சொற்படி கேட்டு நடப்பவர்க்கு
சூழும் நெருப்பும் இதமல்லவா!
அண்டம் அனைத்தையும் அசைப்பவள் நீயே!
ஆதி சிவனின் ஆற்றலும் நீயே!
சொல்லின் பொருளை சுமப்பவள் நீயே!
சோர்வை மறைப்பது நின்திரு சக்தியே!
செல்லா காசுக்கும் சிதையா பணத்துக்கும்
வளையாத செங்கோல் உனதே!
கல்லாத கல்விக்கும் காணாத பொருளுக்கும்
கருவான ஆற்றல் நினதே!
வில்லாதி வில்லனும் வில்லாக வளைந்து
வணங்கிடும் பாதங்கள் உனதே!
வல்லானை விஞ்சிடும் வலிமைக ளெல்லாம்
வாழ்த்திடும் நின்திரு புகழே!
மனதினில் சுத்தம் மெருகேற வேண்டும்
மகிழ்ச்சி பெற்றிட வேண்டும்
தினம் தினம் புதிய எண்ணங்களால் - என்
சிந்தை வளம் பெற வேண்டும்
வென்றிடும் வரையில் நீ வேண்டும் - என
வேண்டாத நினைப்பு வர வேண்டும்
அன்றாடம் நீ வந்து அமுதளிக்க - எனக்கு
அவ்வப்போது பசிக்க வேண்டும்
**C. விஸ்வநாதன்