உலகே மாயம்

காட்டின் நடுவே சிறு கோயில். அதில் ஒரு குரு. அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தார். மக்களிடையே செல்வதோ, அறிவுரை-போதனை என்று தடபுடல் செய்வதோ கிடையாது.

ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களின் முகப்பொலிவே, அவர்கள், மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது. அவர்கள் குருவிடம் உபதேசம் பெறலாயினர்.

வந்த சிஷ்யர்கள் குருவிடம், ''உங்கள் பெயர் அறிந்து கொள்ளலாமா!!'' என்று கேட்டனர்.

''என் பெயர் ஹோகன்!'' என்றார் குரு.

''ஞான குரு ஹோகன் தாங்களா?''

''இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது!'' என்றார் குரு.

உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுக்கள். இரவு குளிராய் இருக்கவே குளிர்காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மதம் சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த ஹோகன், மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.

பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு-புறவாழ்வு பற்றித் திரும்பியது.

''மனிதனின் புறவாழ்வே மாயம். அகவாழ்வு தான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் ஸாஸ்வதம் (என்றைக்கும் நிலைத்திருப்பது).'' என்றார் ஒருவர்.

''அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல் தானே! கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பது மாயை. தோன்றும் உலகம், தொடரும் வாழ்வு, இதுவே உண்மை!'' என்றார் மற்றொருவர்.

''உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!'' என்பது இன்னொருவரின் வாதம்.

''இல்லை. உலகம் உண்மை. புறநிலையே ப்ரத்யட்சம்!'' என்ற கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.

''உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது!''  மற்றொருவர் விவாதம் இப்படி இருந்தது.

கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள்.

''உங்கள் கருத்து என்ன? உலகம் ப்ரத்யட்சமான உண்மையா? அல்லது, மனோ ரீதியான மாயையா?'' கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.

ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

''அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது, ப்ரத்யட்சக் கண்கூடா?''

''போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயை தான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள் தான். அந்த வகையில் அந்தப் பெரிய பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.''

''அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?''

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும், தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடர்களாயினர்.

உன்னுள் இருக்கும் உன்னை அறிந்துகொள்வது தான் பெரும் பாடு. எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று வெளியே தேடுகிறான் மனிதன், உன்னுள் இருக்கும் இருப்பில் இருந்து வெளியே மனதைச் செலுத்துவது கடலில் வீசும் வலை போல. நிச்சயம், மீன்கள் சிக்குவதைப் போல எண்ணங்களுள் சிக்குண்டு விடுகிறான் மனிதன். எண்ணமே தானாகிறான். தன்னிலை கலைந்து, மனம் எதை நினைக்கிறதோ, அதுவாகவே ஆகி விடுகிறது, உன்னுள் இருந்து அனைத்தையும் பார்ப்பவன் இறைவன்; பார்க்கும் நீயே இறைவன்.

தான் யாரென விடையறியாத மனம் தன்னை வினவாமல், இவ்வுலகில் மற்ற வினாக்களை கேட்டு விடையறிந்து கொண்டேயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக