இறைவன் கணக்கு


ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம். பெருத்த மழை வேறு! அப்போது அங்கே அன்பு என்று மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம் கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றனர் அழகும் அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?'' என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன'' என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன. ஆக எட்டு ரொட்டிகள்! இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் போடலாம். இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும். நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது.

அன்பு கிளம்பும்போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு, எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, "நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார். 

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக் காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. "மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும் நான் பங்கிடச் சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச் சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள் காட்சி தந்து தீர்ப்பும் விளக்கமும் அளித்தார். இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும் அழைத்தார். 

மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்! அழகு எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது! அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டு துண்டுகள்தான் கிடைத்தது! ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான். அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது. தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக