இந்தியர்களின் கனிவான கவனத்திற்கு

தேவைக்கு மிஞ்சிய வசதிகள் நம்மிடம்
தேர்ச்சி பெறாமலே வாழ்க்கையில் தவிக்கிறோம்.

நடிகர்கள் இன்று நடமாடும் தெய்வங்கள்
நடந்தவர்கள் நவீன கால அருங்காட்சியகங்கள்

மரப்பாச்சி பொம்மைக்கு மாராப்பு சுற்றினோம்
மனித உறுப்புகளையே மலிவாக விற்கிறோம்

கடவுளுக்குப் பயந்து கை தொழுத காலங்களில்
கருணை மகள் கோயில் கவலைகளை தீர்த்தது

கணினிகளை மீட்டும் தகவல் தொடர்பில்
காசு பார்க்கும் வித்தையே கடவுளானது

விதையில்லா கனியிலும் கருவில்லா முட்டையிலும்
விலையில்லா மனிதநேயம் விடைபெற்றுப் போனது

கூட்டமாக வாழ்ந்தவர்கள் நாம் - இன்று
கூண்டுக்குள்ளே சுதந்திரம் தேட எங்கு கற்றோம் ?

மேற்கத்திய நகல்களாக மீசை இழந்து நிற்பது
புலியைப் பார்த்து சூடு போட்ட பூனை போன்றது.

பிழைகள் வருமுன் காப்பது அவர்கள் பண்பாடு
பிழைகள் வராமல் தடுப்பதே நம் மூத்தகுடி ஏற்பாடு

மாற்றம் பெற்றால் தான் பண்பாடு மெருகேறும்
மனிதநேயம் வறண்டால் அமளியில் திண்டாடும்

என்ன நடந்தாலும் இது இயல்பு என்று
எண்ணுவது அல்ல நம் பண்பாடு

எதிரிக்கு இன்னல் நேர்ந்தாலும் - இதயம்
பதறி உதவுவதே அதன் சும்மாடு!

மக்கும் அறங்களின் மறுபிறப்பும் நம் கையில்
விக்கல் வேதனைக்கு வைத்தியமும் நம்மிடத்தில்

ஏனென்றால்,
பெற்றோர் வழி நடத்தும் பழுத்த தலைமுறையும்
பிள்ளைகள் வழி நடக்கும் பிஞ்சு தலைமுறையும்
இது தான்!

**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக