படி தாண்டினாலும் நீ பத்தினியே!





மோகப்படும் பொழு தெல்லாம்
முகர்ந்து உன்னை எறிவதற்கு
போகப் பொருளாகவே பார்க்கும்
புத்தியை யார் கொடுத்தது?

தோள் சீலைப் போராட்டம்
தொடங்கிய உன் மண்ணில்
தொந்தரவான ஆடை நேர்த்திக்கு
முற்றுப் புள்ளி எப்போது?

குட்டும் பொழுது குனிந்து
உன் கோபத்தை அடக்காதே!
வேதனை, வலி, வெறியினை
வேட்டியாய் வரிந்து கட்டி எழு!

அப்பா, கணவன், மகனென்று
ஆரம்ப வாழ்க்கை முதலே
ஆணினைச் சார்ந்து வாழும்
அடிமை சங்கல்பம் அடங்கட்டும்!

படிதாண்டா பத்தினி என்பது
பாழ்படுத்தும் வஞ்சப் புகழ்ச்சி
பாரதியின் ரத்தம் இருந்தால்
படி தாண்டினாலும் நீ பத்தினியே!

செடியினைச் சார்ந்து நிற்கும்
மலராய் இருந்தது போதும்
இனிமேல் சுதந்திரப் பறவையுடன்
உன் சுதி சேர்ந்து பாடட்டும்!

**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக