ஓட்டப்பந்தயம்


வானம் வரையும் ஓடுகிறேன்
வாழ்க்கைப் புதிரின் விடைதேடி
வாசல் தாண்டி வந்து பின்னும்
வாழ்வின் கேள்வி விளங்கவில்லை

தேடித் தேடித் தாண்டுகிறேன்
தேடல் இன்னும் ஓயவில்லை
காயம் பட்டும் ஓயாமல்
காயும் என்று தேற்றுகிறேன்

சாரல் விட்ட நீரெல்லாம்
சமுத்திரத்தில் தங்கி விட்டால்
வேருக்கு நீர் வார்க்க
விளைமேகம் வருவதெங்கே?

தேடல் என்பது நின்று விட்டால்
தேங்கிய குட்டை நீர் போன்றது
நதியின் தேடல் நீளமானதால்
நாளும் புதுமை காண்கிறது.

தேடல் என்பதே வாழ்க்கையானால்
எதைத் தான் தேடி ஓடுகின்றோம்?
தேடும் பரிசு தெரிந்து விட்டால்
தேவை ஒரு நாள் தீர்ந்திடுமோ!

காலம் என்னும் ஓட்டத்தில்
கரைகள் என்பது கிடையாது
வானம் கூட விலக்கின்றி
வரம்பு தேடியே விரிகின்றது

இருக்கும் வரை வாழ்ந்து விடு
இருப்பதைக் கொண்டு லயித்து விடு
சிறப்பு என்பது சிற்பியின் கையில்
செதுக்க செதுக்க செம்மையாகும்.

உச்சத்தின் அளவு நிரந்தரமல்ல
ஒவ்வொரு நாளும் உயர்வடையும்
சத்தியம் கொண்டு போராடு
சரித்திர வெற்றி பதிவாகும்.

**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக