உப்பு - தேவையான அளவு


அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும் வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தவர்.

அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்வதற்காக அழைத்திருந்தனர். கூட்டத்திற்கு எப்படியும் 10 ஆயிரம் பேராவது வருவார்கள் என்று அந்த ஊர் பெரியவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் அங்கு வந்தார், குரு. அவரை ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர ஒரு குதிரைக்காரர் வந்திருந்தார்.

அன்றைக்கோ அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் கூடியிருந்த அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். குரு அங்கு வந்தபோது யாருமே இல்லை. அவரும் குதிரைக்காரரும்தான் அங்கே இருந்தனர்.

மழையின் காரணமாக தண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது. கூட்டத்தை இனி நடத்த முடியாது என்ற நிலையைக் கண்டதும், குருவுக்கு பெரிய ஏமாற்றம்.

‘இங்கே குதிரைக்காரன் மட்டும்தான் இருக்கிறான். அவன் ஒருவனுக்காக நாம் பிரசங்கம் செய்ய வேண்டுமா?’ என்று நினைத்தார்.

பின்னர் குதிரைக்காரரை நோக்கி, “இப்போது என்னப்பா செய்வது?” என்று கேட்டார், குரு.

அதற்கு அந்த குதிரைக்காரர், “வேண்டுமானால் எனக்கு மட்டும் பிரசங்கம் செய்யுங்கள், சாமி. நானும் ஏதோ நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். உங்களுக்கும், வந்ததற்கு வெறுப்பில்லாமல் திரும்ப, மனசு வரும்.” என்றார்.

குரு, குதிரைக்காரருக்கு ஒரு சபாஷ் சொல்லிவிட்டு, தன்னுடைய பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்.. என்று சரமாரியாக பல விஷயங்களைப் பற்றி பேசிப் பிரமாதப்படுத்தினாா்.

ஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. உடனே குதிரைக்காரரைப் பார்த்து, “எப்படியப்பா இருந்தது என் பேச்சு”ன்னு பெருமை பொங்க கேட்டார், குரு.

“ஐயா.. நான் குதிரைக்காரன். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒன்று.. நான் புல்லு வைக்கப்போற இடத்திலே ஒரு குதிரை தான் இருக்கிறது என்றால், அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன். 30 குதிரைக்கான புல்லையும் அந்த ஒரே குதிரைக்கே கொட்டிட்டு வந்துவிட மாட்டேன்..” என்றார், அந்த குதிரைக்காரர்.

குரு அதிர்ந்துபோய்விட்டார்.

ஆம்.. மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத அல்லது வேண்டாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்வது, நம்மைதான் முட்டாளாக சித்தரிக்கும். அதை குருவும் உணா்ந்துகொண்டாா்.

எதுவுமே தேவையான அளவு இருந்தால் தான் ருசியாக இருக்கும். தேவைக்கு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாது. அதனால், ஒவ்வொன்றிலும் தேவையை அறிந்து செயல்படுவோம்.



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக