துணிவே துணை


அரசர் ஒருவர் வேட்டையாட காட்டுக்குச் சென்றார். சென்றபோது, தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார்.

அவர், வேட்டையில் மும்முரமாக இருக்க, நாய், அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது. பல நிமிடங்களுக்குப் பிறகுதான், அது, வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது, நாய். அது தன்னை வேட்டையாடத்தான்  வருகிறது என்பதையும் உணர்ந்தது.

தப்பிப்பது எப்படியென எண்ணியபோது, எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது, அந்த நாய். புலிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்து கொண்டது.

புலி அருகில் வந்ததும், "ஆஹா... புலியின் மாமிசம் என்ன சுவை... என்ன சுவை.. இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே!!", என நாக்கைச் சுழற்றியபடி தனக்குத்தானே பேசியது.

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை.. இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்!' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் புறம் சென்றது. 

இந்த சம்பவத்தைக், குரங்கு ஒன்று, மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. நாயைக் காட்டிக் கொடுத்தால், புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பும் வெகுமதியும் தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலியை நோக்கி விரைந்தது.

இதைப் பார்த்த நாய், ஏதோ விவகாரம் எனப்புரிந்து கொண்டதோடு, இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

நாய் செய்த தந்திரத்தை புலியிடம் ஒப்பித்தது குரங்கு.

கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து, அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்.", என்று உறுமிவிட்டு, குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும், புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்தபடியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து கொண்டு,
"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக அலுத்துக் கொண்டது.

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்களே யூகித்துக் கொள்ள முடியும்.

எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுவிடக் கூடாது. தைரியம் தான் பயத்தை அகற்றி நம்பிக்கையை கொடுக்கும். இக்கட்டான ஒரு நிகழ்வு நடந்து விட்டால், அதையே நினைத்து கவலைப்படுவதாலோ, சண்டையிடுவதாலோ, எந்த மாற்றமும் நிகழ்ந்திடாது. அதற்குப் பதிலாக, 'அடுத்தது என்ன செய்யலாம்?', என்று யோசித்து செயல்பட்டால் நடக்கவிருப்பதாவது நல்லவையாக விளையும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக