நதியின் மாற்றம்


கடலோடு கலக்கும் முன்
அச்சத்தால் நடுங்குகிறாள், நதி.
நடந்த பாதையைத்
திரும்பிப் பார்க்கிறாள்.

நெடிய சிகரங்களிலிருந்து இறங்கி
காடுகளின், கிராமங்களின் ஊடாக
வளைந்து நெளிந்து நடந்த
பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.

அவள் எதிரே விரிந்து கிடக்கிறது
பெருங்கடல்.
அதில் கலந்தால்
அடையாளமற்றுப் போவாள்
என்றென்றும், நிரந்தரமாக!

ஆனால்,
அவளால் திரும்பி நடக்க முடியாது.
அவளுக்கு மட்டுமல்ல, எவருக்கும்!
வாழ்தலில் திரும்பிச் செல்லல்
எவருக்கும் இல்லை.

கடலுக்குள் கலந்துதான் ஆக வேண்டும்.

அப்போதுதான்,
அவளுக்கு அச்சம் தெளிந்தது.
அனைத்தும் புரிந்தது.

நாம் அடையாளமற்றுப் போகவில்லை.
இதுநாள் வரை
நதியாக இருந்த நாம்
இனி
கடலாக ஆகிறோம் என!

____________________________________________
கலீல் ஜிப்ரான் இயற்றிய கவிதையொன்றின் தளர்வான மொழிபெயர்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக