'நான்' யார் ?


ஆத்மாவிலிருந்து தோன்றுகின்ற ஓர் அற்புதமான சக்தியே மனம். மனம் தான் நினைவுகளைத் தோற்றுவிக்கிறது.

இவர் நல்லவர், அவர் கெட்டவர்;
இது சரி, அது தவறு;
இது உயர்வு, அது தாழ்வு;
என்று விதவிதமான நினைவு அடுக்குகள் இருக்கின்றன. அந்த நினைவுகளை நீக்கினால்,
மனம் என்ற ஒரு பொருள் அறவேயில்லை.

நினைவுகளின் அடுக்குதான் மனம். அந்த நினைவுகள் உன்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. நினைவுகளின் ஊடாகவே நீ இந்த உலகத்தைப் பார்க்கிறாய்.

ஆழ்ந்த தூக்கத்தில் நினைவுகள் இல்லை. எனவே, அங்கு உலகமும் இல்லை.

உன் மனதால் உலகத்தை சிருஷ்டி செய்கிறாய். பிறகு, நீயே அதை உனக்குள் இழுத்தும் கொள்கிறாய்.

'இது தான் உலகம்’ என்று நினைக்கிறாய்.
அவர்கள் நல்லவர்கள், இவர்கள் கெட்டவர்கள், என்று இரண்டு விதமாகப் பிரிப்பது நீயே. உண்மையில் அவர்கள் யார் என்று நீ பார்ப்பதேயில்லை.

நீ தீர்மானிப்பது பல தீர்மானங்களை உனக்குள் உருவாக்குகின்றது. நல்லவர்- கெட்டவர் என்று சிருஷ்டித்து, இன்னும் பன்மடங்கு பெருகி, இந்த உலகம் அதன் இயல்பாக இல்லாமல் உன் உலகமாக,
நீ சிருஷ்டித்த உலகமாக மாறுகிறது.

நீ 'கெட்டது' என்று தீர்மானித்ததை, வேறு ஒருவர் 'நல்லது' என்று தீர்மானிக்கிறார்.
அவருடைய உலகத்தில், நீ, நல்லவர் என்று சொல்பவரைக் கெட்டவராகக் கருதுகிறது.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு, உண்மையான உலகத்தை, அதனுடய சுய இருப்பை உணர முடியாமல் அவஸ்தைப் படுகிறார்கள்.

தன் 'மனத்தை ஒடுக்கிய' ஞானியால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு பார்க்க முடிகிறது.

'நான்’ என்பதுதான் மனம்.
'நான்’ இல்லையெனில் மனம் இல்லை.
'நான் யார்’ என்ற விசாரணையில் மனம் அழியும்.

மனமே இந்த மனதை, நீ யார்?, என்ன செய்கிறாய்?, என்று உற்றுக் கவனித்து விசாரித்து, அப்படி விசாரிக்கின்ற 'நானு'ம் அழிந்துபோகும்.

பிணத்தைப் புரட்டி புரட்டிச் சுடுகின்ற தடி, பிணம் முற்றிலும் எரிந்துபோன பிறகு, அதுவும் நெருப்பில் போடப்படுவது போல, விசாரித்த மனமும் காணாது போகும்.

எண்ணங்களோடு போகாமல்,
எண்ணங்களை எப்படிச் செயலாக்குவது என்று சிந்திக்காமல், எண்ணங்களின் விளைவு பற்றி ஆராயாமல், எதற்கு இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன என்று விசாரித்தால், மனம் தன் ஆரம்ப நிலைக்கு வந்துவிடும். அந்த எண்ணமும் அடங்கும்.

இவ்வாறு பழகப் பழக, மனம் உதித்த இடத்திலேயே ஒடுங்கியிருக்கின்ற சக்தி அதிகரிக்கின்றது. நினைவுகள் அழிந்து, மனம் காணாமல் போன பின், ஆசை எதுவும் எழுவதில்லை. அதுவே முற்றும் துறந்த நிலை. அங்கே தான், ஆன்மா, ஞான வெளிச்சத்தை அடைகிறது; எப்பொழுதும் நிலைத்திருக்கும் பொருளைத் (பரம்பொருள்) தேட ஆரம்பிக்கிறது.

'நான்’ என்ற எண்ணம் உதிக்கும் இடத்திலிருந்து அது இல்லாமல் போவதுவே அற்புதம்!

அதுவே மௌனம்.
அதுவே ஞானதிருஷ்டி.
அதுதான் நம் உண்மை இருப்பு.
அதுதான் ஆன்ம சொரூபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக