கடவுள் படையலை சாப்பிடுவாரா?


சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா?" என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவிப் பார்த்துவிட்டு "நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்" என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது, எனப் பொருள் கொண்ட "பூர்ணமிதம்" எனும் ஈஷாவாஸ்ய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார், குரு. அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போடத் தொடங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, கேள்வி கேட்ட சிஷ்யனை, சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி
நின்றான்.

குரு, "எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?".

சிஷ்யன், "முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் குருவே".

"எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்" என்றார், குரு.

கண்கள் மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி, 'கணீர்' குரலில் "பூர்ண மித பூர்ண மிதம்..." எனத் தொடங்கி முழுமையாக முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. "நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே!! எங்கே, உனது புத்தகத்தை காட்டு..??”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. "குருவே, தவறு இருந்தால் மன்னியுங்கள்! ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதைப் போலவே கூறினேன்."

"இந்தப் புத்தகத்திலிருந்து படித்துத் தான் மனதில் உள்வாங்கினாயா?" என குரு கேட்டதற்கு 'ஆம்' என பதிலளித்தான்.

"இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால், மந்திரம் இதில் இருக்கிறதே!! நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா?" என குரு கேட்டதும் சிஷ்யன் குழப்பமாகப் பார்த்தான்.

குரு தொடர்ந்தார்.. "உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ
உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? குறையவில்லை அல்லவா!! அது போலத்தான், இறைவன் சூட்சமமாக உட்கொண்ட பிரசாதமும் அளவில் குறையாமல், நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாக நைவேத்யத்தை உட்கொள்கிறோம். சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாக நைவேத்யத்தை உட்கொள்கிறான்."



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக