மகிழ்ச்சியான மனம்


அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம் தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை. மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்... மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.

'துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்' என்று யாரோ சொல்ல... அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான்.

தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு, "ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன். இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே!", என்று சரணடைந்தான்.

அந்த யோகியோ, செல்வந்தன் சொன்னதைக், காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும் வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி, தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி. 'அடடா... இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே!', என்ற துக்கம், ஆத்திரமாக மாற, அந்த யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.

யோகியின் ஓட்டத்திற்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார்.

மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக் கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி, "என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள்.", என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம்.
அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்: "இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன. ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது."

மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியே இல்லை; மனதில்தான் இருக்கிறது. பக்குவப்பட்ட மனத்திற்கு எந்நாளும் ஆனந்தமே!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக