கண்ணன் என் காதலன்


செய்தவை குற்றமோ? செய்பவை குற்றமோ?
தேறுமோர் அறிவிலேன் பேதை!
கொய்த என் மலர்களை குப்பையில் மூடினேன்
குற்றமென்று அறிகிலேன் ஏழை!
கை தவழ் பேரருள் காற்றிடை வீசினேன்
காரணம் காண்கிலேன் பாவி!
மை தவழ் மேனியாய் மயக்கினை தீர்ப்பது
உன் வார்த்தையே கண்ணபிரானே!

நன்றி இல்லாமல் யான் நடந்திருந்தேன் எனில்
நாயினும் கீழ் எனப்படுவேன்
அன்றி யான் செய்தவை அறம் எனப்படுமெனில்
அரசனுக்கு அரசனாய் மகிழ்வேன்
வென்றி யான் கொண்டவை மேன்மை யான் கண்டவை
வியத்தகும் எனதால் அல்லேன்
அன்று எனது அன்னையும் தந்தையும் செய்ததோர்
அறத்தினால் கண்ணபிரானே!

நீண்டதோர் ஆயுளும் நிறைந்ததோர் செல்வமும்
நீ தரக் கேட்டிலேன் தலைவா!
தோண்டும் ஓர் கைக்கு எலாம் சுரப்பதால்
உன்னடி தொழுகிறேன் என்னுயிர் கண்ணா!
ஈண்டு நான், ஆண்டு நீ, என் செயக் கூடுமோ
என்னுயிர்க் கண்ணபிரானே!

முட்டையில் என்னை நான் மூடினேன்
அன்று உனை முழுமையாய்க் கண்டிலேன் ஐயா!
பெட்டையாய் சேவலாய் பொய்யாய்
கட்டையாய் வாழ்க்கையை கழித்த பின்
இன்று உனைக் காண்கிறேன் – என்னையே நானே!
அட்டையாய் ஒட்டினேன் அண்ணலே!
இன்று எனக்கு அருள்புரி கண்ணபிரானே!

**”கவியரசு” கண்ணதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக