நதியினைப் போலே நடந்திடுவோமே!


காட்டினில் பிறந்து கடலினை அடையும்
நதியினைப் போலே நடந்திடுவோமே.

ஆயிரம் சொந்தம் ஆறுதல் கூறும்
சேற்றினை நீரால் துடைப்பவர் யாரோ?
வாழ்த்துரை வார்த்தை வளர்ச்சியை மயக்கும்
தூற்றுவர் எச்சம் தூய்மையைக் கெடுக்கும்
கன மழையென்ன? சுடும் வெயிலென்ன?
கடமையைச் செய்வேன், பலனவன் கையில்.

கதிரவன் கோபம் வெயிலாய் தகித்து
கவலைகள் நீங்க பொழுதினைக் கழிப்பான்
ஆழ்கடல் பசித்தால் அலைகளை எழுப்பி
அனைத்தையும் விழுங்கி அமைதியில் தங்கும்
வேதனை வந்தால் விழிதரும் நீரை
விலக்கிடு, அன்று விடியல் தெரியும்.

மண்ணில் தாகம் வாழ்கின்ற பொழுது
மழையது பொய்த்தால் தரை என்ன செய்யும்?
மலை போல் நீ எழுந்து நின்றால் – பின்
மழை முகில் கூட்டம் உன்னுடன் தவழும்
தோல்விகள் முன்னால் தோற்று விடாதே
வெயில் தரும் அவனே, மழை சுகம் தருவான்.


**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக