வேலியில்லாத் தோட்டம்

தாசி என்றும் வேசி என்றும்
தரணியிலே எனக்குப் பல பெயர்கள்
இவை தரம் கெட்ட சொற்களென்றும்
தகாதவள் இவள் என்றும்
தள்ளி வைத்து தான் படிக்கிறார்கள்.

வாசிக்க விலை பேசுபவர்கள் என்னை
வாங்கிக் கொள்ள விருப்பப் படுவதில்லை
வாடிக்கையாய் படிப்பவர்கள் கூட – நான்
வாடி நிற்கையில் வருத்தம் தெரிவிப்பதில்லை

மலரில் கூட ஒரு முறை தான்
மகரந்தச் சேர்க்கை நடைபெறும் – என்னுள்
மணிக்கு ஒரு முறை மகரந்தம் சேர்ந்தாலும்
மலட்டுத் தன்மைக்கே மரியாதை தருகிறார்கள்

வானம் விடிந்தாலும் வாகா இணைந்தாலும்
வாங்கிய துட்டுக்கு வருத்தம் தீர்க்கும் வரை
அமாவாசையும் பௌர்ணமியும் – என்
அகராதிக்கு அப்பாற் பட்டவையே

அகத்தையும் அறிவையும் அப்புறப்படுத்தி விட்டு
சுகத்தையும் மானத்தையும் சுலபமாக இழக்கிறேன்
மறுபிறப்பு ஒன்று கடவுள் விதித்திருந்தால்
அதிலாவது என் மானத்தை மீட்டுத் தரட்டும்

வருவோர் சோகங்களை எல்லாம்
வாங்கிக் கொண்ட பின்னும் புனிதமடைய
நான் கங்கையுமில்லை காவிரியுமில்லை
கால் வயிறு சோற்றுக்கு கற்பை விற்பவள்

பிழையாக பிழைப்பதால் பேச்சுரிமை அற்றவள்
விலை கொடுத்து வாங்கி விருப்பப்படி ஆட
வேசி ஒரு விளையாட்டுப் பொருளல்ல
வேங்கைக்கும் பசியுண்டு வேசிக்கும் வலியுண்டு

வரிக்குதிரையின் கோடுகளை விட – நான்
வாங்கிய கீறல்களுக்கு வலி அதிகம்
விடியாத இரவுகளில் வேலியை உருவாக்க
வியர்வையும் கண்ணீரும் விட்டதுவே மிச்சம்

மேய வரும் காளைகளே,
கொஞ்சம் மெதுவாக வாழ்ந்திடுங்கள்.
வேலியில்லா தோட்டத்திற்கும்
வேதனைகள் இருக்கிறது.

**C. விஸ்வநாதன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக