இந்நாள் இனிய நாள்



நேற்று இன்று நாளை...
எதுவும் ஒன்று போன்றதில்லை.

அன்று இதைப் படித்திருந்தால்...
இன்று அது கிடைத்து விட்டால்...
என ஏராளமான ஆற்றாமைகள்
இதயத்தை அழுத்திப் பார்க்கும்.

இந்த நிலத்தில் பிறப்போமென்று
எழுதி வைத்தா நாம் பிறந்தோம்?
விழுந்த நிலத்தில் விளைகிறோம்
விளைச்சல் முடிந்ததும் கலைகிறோம்

ஆளில்லாத படகு கூட ஒரு நாள்
அமைதியாய் சென்று கரை சேரும்
எந்த கரையை சேருமென்பது
இறைவன் வகுத்த விருப்பமாகும்

கேள்விகளுக் கெல்லாம் விடையுண்டு
கேட்டவுடன் கிடைத்து விடாது!
கேள்விக்கான பதிலை சுவைத்துக்
கேட்கும் பக்குவத்தில் கைக்கு வரும்.

எல்லோரும் இவ்வுலகில் வீரர்களே!
ஆனால் எப்போதும் அல்ல
எந்நாளும் புது இனிய நாளே!
ஆனால் எல்லோர்க்கும் அல்ல

சற்று தொலைவில் வெற்றியிருக்கும்
சலிப்பு வந்து விட்டு விடாதீர்கள்
விடாமுயற்சி இருக்கும் வரை
வெற்றி கை நழுவிப் போகாது.


**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக