கலைமகள் திருமகிமை



வெண்கடி மலர்க்கமலம் மீட்டும் அகில்வீணை
தளிர்இலை அன்ன பாதம்
தண்ணொளி வீசிடும் பொன்னெழிற் பூமுகம்
பூட்டிய தாயுனைப் போற்றுகிறேன்
எண்ணிய எண்ணங்கள் எழிலுலகைச் சேர்ந்திட
வண்ணங்கள் செய்திடும் வண்ணமயிலே!
எண்ணிலும் எழுத்திலும் எழுதிடா இயல்பிலும்
ஏழிசைக் கூட்டிலும் வசிப்பவளே!

வெண்பனிக் காலையிற் வேதமும் கானமும்
விரவிடக் கண்டிடும் ஞானமயிலே!
தண்ணீர் இருந்திடினும் தளர்த்தி நுகர்ந்திட
சந்ததம் கூறிடும் அன்னமயிலே!
பண்புலம் காட்டிடும் நன்நடை நல்கிட
நின்புலம் ஏட்டினில் ஏற்றியவளே!
வண்டமிழ் நாடெங்கும் வாசமிடும் பூந்தமிழே!
கலைவாணி, அருள்வாய்நீ, அருள்வாணி!

பாவகை: எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

**C. விஸ்வநாதன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக